ADDED : ஆக 15, 2026 02:33 AM

இரும்பு குழாய் விழுந்து தொழிலாளி பலி
கொடுங்கையூர்: கொடுங்கையூர் ஆர்.வி.நகர் பகுதியில், 15 ஆண்டுகளாக பயன்பாடின்றி இருந்த மேல்நிலை குடிநீர் தொட்டியை இடிக்கும் பணி நடந்து வருகிறது. நேற்று காலை 11:00 மணிக்கு, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தொழிலாளி ஜமீர் ஓசன், 28, பணியில் இருந்தபோது, அவரது தலையில் இரும்பு குழாய் விழுந்தது. காயமடைந்த அவரை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. கொடுங்கையூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பஸ் மோதிய விபத்தில் பெண் இறப்பு
கோவிலம்பாக்கம்: கோவிலம்பாக்கம், ஈச்சங்காடு பகுதியைச் சேர்ந்தவர் சத்தியசீலன் மனைவி ரேவதி, 56. மடிப்பாக்கம் - மேடவாக்கம் பிரதான சாலையை, இம்மாதம் 12ம் தேதி கடக்க முயன்றபோது, மாநகர பேருந்தில் அடிபட்டு, தாம்பரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார்.
போதை மாத்திரை கடத்தல்: பெண் கைது
செங்குன்றம்: செங்குன்றம் பேருந்து நிலையத்தில் சந்தேகிக்கும் வகையில் நின்றிருந்த பெரம்பூரைச் சேர்ந்த துர்கா, 33, என்ற பெண்ணை, செங்குன்றம் போலீசார் பிடித்தனர். அவரிடம் நடத்திய சோதனையில் 1,500 போதை மாத்திரைகள் இருந்தன. இவற்றின் மதிப்பு 2.50 லட்சம் ரூபாய். துர்காவை, போலீசார் நேற்று கைது செய்தனர்.
மெரினாவில் இறந்து கிடந்த மூதாட்டி
மெரினா: மெரினா குடிசை மாற்று வாரிய குடியிருப்பு அலுவலகம் எதிரே மணற்பரப்பில் திருவல்லிக்கேணி ஆரிமுத்து தெருவைச் சேர்ந்த மச்சகாந்தி, 75, என்ற மூதாட்டி இறந்து கிடந்தார். மெரினா போலீசார், உடலை பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
மது போதையில் தவறி விழுந்த வாலிபர் பலி
அம்பத்துார்: துாத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் தங்கராஜ், 23. அம்பத்துார் புதுார் பகுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவு, மது போதையில், வீட்டின் மூன்றாவது மாடியில் உள்ள குடிநீர் தொட்டியின் மீது உறங்கினார். அதிகாலையில் அங்கிருந்து தவறி விழுந்ததில், தலையில் பலத்த காயமடைந்து அங்கேயே உயிரிழந்தார்.
மூதாட்டியிடம் செயின் பறித்தவர் சிக்கினார்
குன்றத்துார்: படப்பை அடுத்த ஆதனுார் டி.டி.சி., நகரைச் சேர்ந்த லட்சுமி, 60, அதே பகுதியில் இம்மாதம் 12ல் நடைபயிற்சியில் ஈடுபட்டார். அவரது 5 சவரன் செயினை பறித்து சென்ற படப்பையைச் சேர்ந்த செல்வம், 30, என்பவரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.
