ADDED : ஆக 17, 2026 02:05 AM
கோவில்களில் திருடியவர் சிக்கினார்
துரைப்பாக்கம்: கந்தன்சாவடி, சோழன் நகரில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. பெருங்குடி, பஞ்சாயத்து சாலையில் நாகாத்தம்மன் கோவில் உள்ளது. கடந்த 12ம் தேதி நள்ளிரவு, இரு கோவில்களின் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டது. இரு சம்பவங்கள் தொடர்பாக, துரைப்பாக்கம் போலீசார் விசாரித்தனர். இதில், திருட்டில் ஈடுபட்டது குரோம்பேட்டையைச் சேர்ந்த ஹானஸ்ட் ராஜ், 39, என்பதும், அம்பத்துாரில் இருந்து பைக்கை திருடி சென்று, கோவில்களில் திருட்டில் ஈடுபட்டதும் தெரிந்தது. நேற்று அவரை போலீசார் கைது செய்தனர்.
கடன் தொல்லை: வாலிபர் தற்கொலை
திரு.வி.க., நகர்: பெரவள்ளூர், வெற்றி நகரைச் சேர்ந்தவர் சரவணன், 39; தனியார் நிறுவன ஊழியர். தெரிந்த நபர்களிடம் கடன் வாங்கிய நிலையில், அவர்கள் திருப்பிக் கேட்டு நெருக்கடி கொடுத்ததால் மனஉளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில், நேற்று அதிகாலை வீட்டில் சரவணன் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திரு.வி.க., நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.
மது விற்ற சிறார்கள் கைது
சென்னை: ஓட்டேரி காவல் நிலைய எல்லையில், பி.டி.ஆர்.சி., விளையாட்டு மைதானம் அருகே, சிறார்கள் இருவர் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டு வந்தனர். இவர்கள் நேற்று கைது செய்யப்பட்டு, சிறார் சீர்திருத்த மையத்தில் சேர்க்கப்பட்டனர். இவர்களிடம் இருந்து, 15 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு
படப்பை: படப்பை அடுத்த சாலமங்கலத்தில், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், சார்பில் புது அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது. இங்கு ஆட்கள் குடியேறாத பகுதியில், 30 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் அழுகிய நிலையில் கிடந்துள்ளது. தகவலறிந்து வந்த படப்பை போலீசார், உடலை பிரேத பரிசோதனைக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.
