ADDED : ஆக 29, 2026 01:20 AM

பெண்ணை சீண்டிய கேரள வாலிபர் கைது
வடபழனி: சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்த 40 வயது பெண், வடபழனியில் வணிக வளாக 'காபி ஷாப்'பில் பணிபுரிந்து, நேற்று முன்தினம் இரவு வீட்டு சென்று கொண்டிருந்தார்.அவ்வழியே வந்த நபர், அப்பெண் சில்மிஷம் செய்தார். அங்கிருந்த காவலாளி மற்றும் மக்கள் அவரை பிடித்து, போலீசில் ஒப்படைத்தனர். பிடிபட்டவர், கேரளாவைச் சேர்ந்த அரவிந்த், 28, என்பதும், 'டிவி' தொடர்களில் உதவி ஒளிப்பதிவாளராக பணிபுரிவதும் தெரிய வந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.
9வது மாடியிலிருந்து வாலிபர் தற்கொலை
நுங்கம்பாக்கம்: புதுக்கோட்டையைச் சேர்ந்த ஆதீஸ், 23; பிசியோதெரபிஸ்ட். நேற்று முன்தினம் இரவு நுங்கம்பாக்கம் ஜி.ஜி., எமிரால்டு டவர்ஸ் கட்டடத்தின் ஒன்பதாவது தளத்தில் உள்ள அலுவலகத்தில் இருந்து, ஜன்னல் வழியாக கீழே குதித்து தற்கொலை செய்தார். நிறுவனம், மாத ஊதியம் 15 ஆயிரம் ரூபாயை வழங்காததால், அவர் தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது.
ஆம்னி பஸ் மோதி மூவர் படுகாயம்
மதுரவாயல்: திருவள்ளூர் மாவட்டம், கசவநல்லாத்துாரைச் சேர்ந்த சரண்யா, 23, மாமியார் பவானி, 40, மகள் லத்திகா, 2, ஆகியோருடன், ஸ்கூட்டரில் கோயம்பேடில் இருந்து பூந்தமல்லி நோக்கிச் சென்றார். மதுரவாயலில், ஸ்கூட்டர் மீது ஆம்னி பேருந்து மோதியதில், பவானியின் இரு கால்களும் நசுங்கின. சரண்யா, லத்திகாவுக்கும் காயம் ஏற்பட்டது. மூவரும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்துக்கு காரணமான பேருந்து ஓட்டுநர் மணிகண்டன், 36, நேற்று கைது செய்யப்பட்டார்.
ரூ.40 லட்சம் மோசடி: தாய் - மகள் சிக்கினர்
அண்ணா நகர்: அண்ணா நகர், குஜ்ஜி முதல் தெருவைச் சேர்ந்த ஜெனிபர், 30, அவரது தாய் பிரமீளா, 57, ஆகியோர், மாதம் 1,000 ரூபாய் வீதம் 12 மாதங்கள் செலுத்தினால், கூடுதலாக 5,000 ரூபாய் சேர்த்து 17,000 ரூபாய் வழங்குவதாக கூறி சீட்டு நடத்தினர். இதை நம்பி மோனிஷா, 32, உள்ளிட்ட 350 பேர் சீட்டு கட்டிய நிலையில், பணத்தை வழங்காமல் இருவரும் 40 லட்சம் ரூபாயுடன் தலைமறைவாகினர். புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், தாய், மகளை நேற்று கைது செய்தனர்.
குழந்தையுடன் கஞ்சா கடத்திய பெண் கைது
கோயம்பேடு: கோயம்பேடு ஆர்ச் அருகே, தனியார் பேருந்தில் இருந்து கை குழந்தையுடன் இறங்கிய பெண்ணை, கோயம்பேடு போலீசார் நேற்று பிடித்தனர். அவரது உடைமைகளில் 6 கிலோ கஞ்சா இருந்தது. விசாரணையில், அவர், ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த கங்காதேவி, 38, என்பதும், ஒடிசாவில் இருந்து கஞ்சா கடத்தி வந்ததும் தெரிந்தது. தவிர, போலீசில் சிக்காமல், முதலுதவிக்கான மருத்துவ பெட்டகத்தில் வைத்து கஞ்சாவை எடுத்து வந்துள்ளார். பஸ் நிலையத்தில் பொருட்களை 'ஸ்கேன்' செய்ய கருவியின் வழியாக அப்பெட்டியை அனுப்பியபோது, அவர் கஞ்சா கடத்தி வந்தது தெரிந்தது. கங்காதேவியை, போலீசார் கைது செய்தனர்.
புதுப்பெண் துாக்கிட்டு தற்கொலை
கொடுங்கையூர்: கொடுங்கையூர், முத்தமிழ் நகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் பிரஜன், 19; ஆட்டோ ஓட்டுநர். இவரது மனைவி பிரியங்கா, 19. மூன்று மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். நேற்று அதிகாலை, படுக்கையறையில் பிரியங்கா துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருமணமாகி மூன்று மாதங்களில் பிரியங்கா உயிரிழந்ததால், ஆர்.டி.ஓ., விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
