ADDED : செப் 04, 2026 03:48 AM

திருடனும், காயலான் கடைக்காரரும் கைது அண்ணா நகர்: அண்ணா நகர் 'வி பிளாக்' 10வது தெருவில் அலுவலகம் நடத்தி வருபவர் சக்திவேல், 40. கடந்த 26ம் தேதி அலுவலகத்திற்கு சென்றபோது, 'பார்க்கிங்' ஏரியாவில் தண்ணீர் தேங்கியிருந்தது. அங்கிருந்த தண்ணீர் குழாய்களின் இரண்டு 'டாப்' உடைக்கப்பட்டு, திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. அண்ணா நகர் போலீசாரின் விசாரணையில், வில்லிவாக்கம், சிட்கோ நகரைச் சேர்ந்த தீபக், 25, சிக்கினார். திருடிய குழாய்களை, எம்.எம்.டி.ஏ., காலனியைச் சேர்ந்த காயலான் கடைக்காரர் முகமது காசிம், 58, என்பவரிடம் விற்றதும் தெரியவந்தது. இருவரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.
மாடி படிக்கட்டில் இருந்து விழுந்தவர் பலி வியாசர்பாடி: வியாசர்பாடி, தாமோதரன் நகரைச் சேர்ந்தவர் நாகரத்தினம், 43; சுமை துாக்கும் தொழிலாளி. தாய் இறந்த நிலையில், மூன்று ஆண்டுகளாக சகோதரி மகாலட்சுமி வீட்டில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு 10:30 மணியளவில், மது போதையில் இரண்டாம் தள மொட்டை மாடிக்கு துாங்க சென்றதாக கூறப்படுகிறது. படிக்கட்டு வழியாக ஏறும்போது கால் இடறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்த அவரை, ஸ்டான்லி மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவர்களின் பரிசோதனையின்போது, இறந்தது தெரியவந்தது. எம்.கே.பி., நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.
திருட்டில் ஈடுபட்ட காக்களூர் நபர் கைது திருநின்றவூர்: நெமிலிச்சேரி ரயில் நிலையம் அருகே, நேற்று முன்தினம் இரவு சந்தேகப்படும்படி சுற்றித்திரிந்த நபரை பிடித்து, திருநின்றவூர் போலீசார் விசாரித்தனர். இதில், திருவள்ளூர் மாவட்டம், காக்களூரைச் சேர்ந்த முகேஷ், 26, என்பதும் மூன்று ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த திருடன் என்பதும் தெரிய வந்தது. அவரிடம் இருந்து, 18 சவரன் நகைகளை பறிமுதல் செய்து, நேற்று சிறையில் அடைத்தனர். முகேஷ் மீது, ஏற்கனவே 10 வழக்குகள் உள்ளன.
