தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ கிரைம் கார்னர்

கிரைம் கார்னர்

கிரைம் கார்னர்


ADDED : நவ 11, 2025 12:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 11, 2025 12:33 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

டீக்கடைக்காரர், ஊழியர் மீது தாக்குதல்

குன்றத்துார்: குன்றத்துார் அருகே சிறுகளத்துாரில் டீக்கடை நடத்தி வருபவர் மஹபூப், 40. இங்கு பீஹாரைச் சேர்ந்த பங்கஜ், 30, என்பவர் டீ மாஸ்டராக பணிபுரிகிறார். நேற்று முன்தினம் இரவு 11:30 மணிக்கு, இவரது கடைக்கு வந்த போதை நபர், பங்கஜிடம் வீண்தகராறு செய்து தாக்கினார். காயமடைந்த பங்கஜை மஹபூப் மீட்டு, பைக்கில் மருத்துவமனை நோக்கி புறப்பட்டார். அப்போது, பின்தொடர்ந்த மர்ம நபர், பைக்கை கீழே தள்ளி மஹபூப், பங்கஜ் ஆகியோரை தாக்கி தலைமறைவானார். இது குறித்து திருமுடிவாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.

வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு

எம்.கே.பி.நகர்: வியாசர்பாடி, சத்தியமூர்த்தி நகர், டி.டி.பிளாக்கைச் சேர்ந்தவர் ஆயிஷா பீவி, 50. இவரது கணவர் உயிரிழந்த நிலையில், மகள் முகமது அப்ரின், 25, உடன் வசித்து வருகிறார். முகமது அப்ரின் தனியார் ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரிகிறார்.

நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள், பீரோவில் இருந்த 90,000 ரூபாய், வெள்ளி கொலுசு, வெள்ளி செயின், தங்க மூக்குத்தி உள்ளிட்டவற்றை திருடி சென்றனர். எம்.கே.பி.நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.

பைக் திருடிய வாலிபருக்கு 'கம்பி'

சென்னை: அயனாவரம், மைலப்ப தெருவைச் சேர்ந்தவர் முனியப்ப ராஜா, 32. கடந்த 3ம் தேதி இரவு, பில்கிங்டன் சாலையில் உள்ள அய்யப்பன் கோவிலுக்கு, யமஹா எப்.இசட் பைக்கில் சென்றார். கோவிலிலேயே தங்கியவர், மறுநாள் காலை பார்த்தபோது, பைக் திருடுபோனது தெரியவந்தது. அயனாவரம் போலீசார் திருட்டில் ஈடுபட்ட ஓட்டேரியைச் சேர்ந்த பிரகாஷ், 21, என்பவரை நேற்று கைது செய்து, பைக்கை பறிமுதல் செய்தனர்.

ரவுடிகள் இருவர் சிறையிலடைப்பு

பேசின்பாலம்: புளியந்தோப்பு பிரதான சாலையில், ஆதிதிராவிடர் பள்ளி அருகே பொதுமக்களை அச்சுறுத்தி, வழிப்பறியில் ஈடுபட்ட ரவுடிகளான வியாசர்பாடியைச் சேர்ந்த ராஜேஷ், 23, புளியந்தோப்பைச் சேர்ந்த நரேஷ், 20, ஆகியோரை, பேசின்பாலம் போலீசார் நேற்று கைது செய்து, சிறையில் அடைத்தனர். இருவரிடம் இருந்தும் குட்கா போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

வீடு புகுந்து மாணவர்களின் லேப்டாப் திருட்டு

பூந்தமல்லி: பூந்தமல்லி நகராட்சி ராஜா அக்ரஹாரம் தெருவில் தொழிற்சாலை மற்றும் கல்லுாரியில் படிக்கும் மாணவர்கள், வீடு வாடகைக்கு எடுத்து தங்கி உள்ளனர். இவர்கள் வசிக்கும் வீட்டில், கடந்த இரண்டு நாட்களில் மூன்று லேப்டாப், இரண்டு மொபைல் போன்கள் திருடப்பட்டுள்ளன. பூந்தமல்லி போலீசார் விசாரிக்கின்றனர்.

மேற்கு வங்க வாலிபர் மர்ம மரணம்

மணலி: மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அபுல் ஓசன், 36. இவர், மணலி, சின்னசேக்காடு, கோவிந்தசாமி தெருவில், தன் உறவினர் முஜிபுர்கான், 31, என்பவருடன் தங்கி, ஹோட்டலில் வேலை பார்த்தார். நேற்று காலை, குளியலறைக்கு சென்ற அபுல் ஓசன், வெகு நேரமாகியும் வெளியே வரவில்லை. சந்தேகமடைந்த உறவினர், கதவை திறந்து பார்த்தபோது, இறந்து கிடந்தது தெரிய வந்தது. மணலி போலீசார் விசாரிக்கின்றனர்.

மதுக்கூடத்தில் வாலிபரை தாக்கியோர் கைது

சென்னை: பெரம்பூரைச் சேர்ந்தவர் அயூப்கான், 21; ஆட்டோ ஓட்டுநர். கடந்த 7ம் தேதி இரவு, ஜி.என்.செட்டி சாலையில் உள்ள தனியார் மதுக்கூடத்தில், அவரது நண்பர்களுடன் சென்று மது அருந்தி உள்ளார். அப்போது, சிலர் வீண் தகராறு செய்து, அவரை தாக்கினர். விசாரித்த தேனாம்பேட்டை போலீசார், தாக்குதலில் ஈடுபட்ட காஞ்சிபுரத்தைச் சேர்ந்த மாலிக், 37, கொடுங்கையூரைச் சேர்ந்த இம்ரான், 28, ஆகியோரை நேற்று கைது செய்தனர்.

மூதாட்டியின் நகை பறித்த மூவர் கைது

திரு.வி.க.நகர்: திரு.வி.க.நகரைச் சேர்ந்தவர் நிஜாமுன்னிசா, 72. கடந்த 7ம் தேதி, பேப்பர்மில்ஸ் சாலையில் தீட்டித்தோட்டம் வழியாக நடந்து சென்ற இவரிடம், பேச்சு கொடுத்த மூவர் நுாதனமாக அவரது 2 சவரன் நகையை திருடி சென்றனர். திரு.வி.க.நகர் போலீசார் விசாரித்து, திருட்டில் ஈடுபட்ட கொடுங்கையூரைச் சேர்ந்த கலிமுல்லா, 20, புளியந்தோப்பைச் சேர்ந்த யுகேஷ், 19, மற்றும் தினேஷ்குமார், 19, ஆகியோரை கைது செய்தனர்.

பட்டாசு வெடித்த தகராறில் அடிதடி

ஆவடி: ஆவடி, காமராஜர் நகரைச் சேர்ந்தவர் அலோஷியஸ், 34; டிரைவர். கடந்த 9ம் தேதி இரவு, இவரது வீட்டின் வெளியே, அதே பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் பட்டாசு வெடித்து கொண்டிருந்தனர். இதனால் எரிச்சல் அடைந்த எதிர் வீட்டில் வசிக்கும் சதிஷ், 23, என்பவர், சிறுவர்களை அவதுாறாக பேசியுள்ளார்.

அதை அலோஷியஸ் தட்டி கேட்ட போது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த சதிஷ், அலோஷியசை கல்லால் தாக்கினார். இதில் காயமடைந்த அலோசியஸ், ஆவடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தலையில் நான்கு தையல் போடப்பட்டது. ஆவடி போலீசார் சதிஷை நேற்று கைது செய்தனர்.

போதை மாத்திரை விற்ற பெண்ணுக்கு 'காப்பு'

ராயப்பேட்டை: ராயப்பேட்டை, முத்தையா தோட்டம் தெரு - வி.பி., ராமன் சாலை சந்திப்பில், நேற்று காலை போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட ராயப்பேட்டையைச் சேர்ந்த பாரதி, 32, என்ற பெண்ணை, ஐஸ்ஹவுஸ் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 88 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us