கிரைம் கார்னர்
காப்பகத்தில் பெண் திடீர் உயிரிழப்பு
ஆவடி: வேளச்சேரி, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் பாஸ்கர், 32. இவரது தாய் மேரி, 50. சில ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மூன்று வாரங்களுக்கு முன், ஆவடி, அண்ணா நகர் பிரதான சாலையில் உள்ள ஆர்.கே.மனிதநேய காப்பகத்தில் மேரியை சேர்த்துள்ளார். காப்பகத்தை, அதே பகுதியைச் சேர்ந்த ரியாஸ், 66, என்பவர் நடத்தி வருகிறார். நேற்று மதியம் மேரி இறந்து விட்டதாக, திடீரென காப்பகத்தில் இருந்து பாஸ்கருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிர்ச்சியடைந்த பாஸ்கர், காப்பகத்தில் முறையாக கவனித்து கொள்ளாததால், தன் தாய் இறந்து விட்டதாக ஆவடி போலீசில் புகார் அளித்துள்ளார்.
போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.
பெண்ணை தாக்கிய வாலிபர் கைது
செம்பியம்: பெரம்பூர், நெல்வயல் பகுதியைச் சேர்ந்தவர் அம்பிகா, 48. இவரை, அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர்கள் மூவர், மது போதையில் தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த அம்பிகா, அருகில் உள்ள பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். விசாரித்த செம்பியம் போலீசார், சூர்யா, 22, மனோஜ், 19, ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாக இருந்த, ஓட்டேரி, கொசப்பேட்டையைச் சேர்ந்த சரண், 20, என்பவரை, நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மறுவாழ்வு மையத்தில் வாலிபர் மரணம்
வானகரம்: காஞ்சிபுரம் அடுத்த பொன்மார், வேங்கடமங்கலத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் குமார், 42. இவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததால், வானகரம், கன்னியம்மன் நகரில் உள்ள தனியார் மனநலம் மற்றும் போதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்தனர். அங்கு, நேற்று முன்தினம் இரவு திடீரென வலிப்பு ஏற்பட்டு மயங்கினார். மருத்துவ பரிசோதனையில் ராஜேஷ்குமார் உயிரிழந்தது தெரியவந்தது. வானகரம் போலீசார், உடலை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.
வாகனங்களை சூறையாடிவருக்கு 'காப்பு'
திருமங்கலம்: பாடி, வி.ஆர்., நகரைச் சேர்ந்தவர் கணேஷ், 35. இவர், பாடி குப்பம் சாலையில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய, அரசு அலுவலர் குடியிருப்பில் பராமரிப்பாளராக பணிபுரி கிறார். நேற்று முன்தினம், அதே பகுதியைச் சேர்ந்த மூர்த்தி, 52, அவரது மகனான தருண், 23, ஆகியோர், குடியிருப்பில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை சேதப்படுத்தியதாக தெரிகிறது. இதை மூர்த்தி தட்டிக் கேட்டபோது, தருண் மறைத்து வைத்திருந்த கத்தியால் கணேஷை தாக்க முயன்றார். விசாரித்த திருமங்கலம் போலீசார், தருணை நேற்று கைது செய்தனர்.
'லவ் டார்ச்சர்' கொடுத்தவருக்கு 'கம்பி'
வண்டலுார்: திருப்பூரைச் சேர்ந்தவர் அஸ்கர், 22. இவர், கல்லுாரியில் படிக்கும்போது மாணவி ஒருவரை காதலித்துள்ளார். தற்போது அப்பெண், சென்னையில் தனியார் விடுதியில் தங்கி வேலை பார்த்து வருகிறார். ஆறு மாதங்களுக்கு முன், தன் காதலனுடன் பேசுவதை தவிர்த்து, காதலுக்கும் 'நோ' கூறியுள்ளார். ஆத்திரமடைந்த அஸ்கர், காதலிக்கும் போது அந்த பெண்ணுடன் எடுத்த புகைப்படங்கள், வீடியோக்களை வலைதளத்தில் பதிவிடுவதாக மிரட்டி உள்ளார். இது குறித்த புகாரை விசாரித்த போலீசார், திருப்பூர் சென்று அஸ்கரை கைது செய்து, நேற்று காலை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
தலைமறைவு குற்றவாளிகள் சிக்கினர்
சென்னை: வியாசர்பாடி, பெரியார் நகரைச் சேர்ந்தவர் ஹரிஹரன், 24; சரித்திர பதிவேடு ரவுடியான இவர் மீது 14 குற்ற வழக்குகள் உள்ளன. குற்ற வழக்கு ஒன்றில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானார். அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிபதி பிடியாணை பிறப்பித்தார். இதையடுத்து வியாசர்பாடி போலீசார் நேற்று ஹரிஹரனை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
அதேபோல, செங்குன்றம், எடப்பாளையத்தைச் சேர்ந்தவர் கணேசன், 48; எம்.கே.பி.நகர் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி. இவர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானார். நீதிமன்ற உத்தரவை அடுத்து, எம்.கே.பி.நகர் போலீசார், கணேசனை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சிறுவனை கடத்த முயன்ற நபர் கைது
கடம்பத்துார்: கடம்பத்துார் அருகே ஆறு வயது சிறுவன், வீட்டில் பாட்டியுடன் விளையாடிக் கொண்டிருந்தார். நேற்று முன் தினம் இரவு 8:00 மணிக்கு, அங்கு வந்த வடமாநிலத்தைச் சேர்ந்த நபர், சிறுவனை கடத்த முயன்றார். பாட்டியின் அலறல் சத்தத்தை கேட்ட மர்மநபர், சிறுவனை விட்டு, அவரது பாட்டியை தாக்கிவிட்டு தப்பிச் சென்றார்.
இது குறித்த புகாரின்படி, கடம்பத்துார் போலீசார் ஹிமாச்சல பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த அமீக் கவுண்டர், 48, என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

