வீடு புகுந்து ரூ.10,000 திருட்டு
பெருங்களத்துார்: பெருங்களத்துாரை அடுத்த வெங்கம்பாக்கத்தை சேர்ந்தவர் பால்பாண்டி, 50. நேற்று முன்தினம் இரவு, வீட்டை பூட்டிவிட்டு, குடும்பத்தினருடன் அருகே நடந்த ஒரு திருமணத்திற்கு சென்றார்.
பின், திரும்பி வந்தபோது, வீட்டின் கதவு திறக்கப்பட்டிருந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், உள்ளே சென்று பார்த்தபோது, உண்டியலை உடைத்து, அதிலிருந்த 10,000 ரூபாயை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. பீர்க்கன்காரணை போலீசார் விசாரிக்கின்றனர்.
வயிற்றுப்போக்கால்
சிறுவன் உயிரிழப்பு
பல்லாவரம்: ஜமீன் பல்லாவரத்தை சேர்ந்தவர் பிரகாஷ். அவரது மகன் தஷீத், 7. தஷீத்துக்கு, இரண்டு நாட்களாக வயிற்றுப்போக்கு இருந்துள்ளது.
இந்நிலையில், நேற்று காலை, சிறுவனுக்கு வயிற்றுப்போக்கு அதிகமாகி, வீட்டில் மயங்கி விழுந்தான். சிறுவனை மீட்டு, அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு துாக்கி சென்றனர். அங்கு, சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள், சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
பெரம்பூரில் ஆட்டோ
திருடியவருக்கு 'காப்பு'
பெரம்பூர்: பெரம்பூர் மங்களபுரம் பகுதியில் வசிப்பவர் மாதேஸ்வரன், 40. சொந்தமாக ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர், கடந்த 14ம் தேதி, வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஆட்டோ மாயமானது. விசாரித்த ஓட்டேரி போலீசார், ஆட்டோவை திருடிச் சென்ற ஓட்டேரி, அனுமந்தராயன் தெருவைச் சேர்ந்த பிரேம் ஆனந்த், 47, என்பவரை, நேற்று கைது செய்து, ஆட்டோவை மீட்டனர்.

