காதலித்து ஏமாற்றிய எஸ்.ஐ.,
பெண் போலீஸ் தற்கொலை முயற்சி
பரங்கிமலை: நந்தம்பாக்கத்தை சேர்ந்த, 25 வயது இளம்பெண். பரங்கிமலை ஆயுதப்படை பிரிவில் காவலராக பணியாற்றி வருகிறார். இவர், அங்கு பணியாற்றி வரும் சப் - -இன்ஸ்பெக்டர் ஒருவரை நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.
இந்நிலையில், இவரை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய எஸ்.ஐ., வேறு ஒரு பெண்ணை திடீரென திருமணம் செய்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த அப்பெண் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையறிந்த அவரது பெற்றோர் பெண்ணை மீட்டு பரங்கிமலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பரங்கிமலை போலீசார் சம்பந்தப்பட்ட எஸ்.ஐ.,யிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
லாரி மோதி தொழிலாளி பலி
தாம்பரம்: பீர்க்கன்காரணை, காமராஜர் நகரைச் சேர்ந்தவர் ஏகாம்பரம், 50. இவர், நேற்று காலை, பீர்க்கன்காரணை ஏரிக்கரை பேருந்து நிறுத்தம் அருகே, நடந்து சென்று ஜி.எஸ்.டி., சாலையை கடக்க முயன்றார். அப்போது, செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் நோக்கி 'காஸ் சிலிண்டர்' ஏற்றி சென்ற லாரி மோதி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தாம்பரம் போலீசார், விபத்து ஏற்படுத்திய கர்நாடகாவை சேர்ந்த லாரி ஓட்டுநர் தேஷ் பாண்டே என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

