வாலிபரை தாக்கிய பெண் கைது
புளியந்தோப்பு: புளியந்தோப்பு கே.பி., பார்க், 11வது பிளாக் பகுதியை சேர்ந்தவர் குப்பு, 65. இவரது மகன் சங்கர் என்கிற சிவகுமார், 40. எலக்ட்ரீஷியன்.
திருமணமாகாத இவர், கடந்த டிச., 29ம் தேதி இரவு 8:00 மணிக்கு, மதுபோதையில் கே.பி., பார்க் 14வது பிளாக் அருகே தகராறு செய்து கொண்டிருந்தார்.
தகவலறிந்து அங்கு வந்த தாய் குப்புவை தகாத வார்த்தையால் திட்டினார். அப்போது அவ்வழியாக வந்த காவியா, 23, என்பவர், தன்னை திட்டுவதாக நினைத்து, அருகில் இருந்த கட்டையை எடுத்து சங்கர் தலையில் ஓங்கி அடித்து விட்டு சென்றார்.
தலையில் பலத்த காயம் அடைந்த சங்கர், ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பேசின்பாலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். பிரபல கஞ்சா வியாபாரியான புஷ்பாவின் தம்பி மகள் என்பதால், காவியாவை கைது செய்யாமல் போலீசார் தாமதித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று காலை, புளியந்தோப்பு ராஜா தோட்டம் பகுதியைச் சேர்ந்த காவியாவை, கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
வீடு புகுந்து அண்ணன், தம்பிக்கு வெட்டு
வண்ணாரப்பேட்டை: பழைய வண்ணாரப்பேட்டை, ராமதாஸ் நகரை சேர்ந்தவர் சரவணன், 36, கோபி, 34. கூலி தொழிலாளிகள். அண்ணன், தம்பியான இவர்கள், நேற்று நள்ளிரவு 2:00 மணிக்கு வீட்டில் துாங்கிக் கொண்டிருந்தனர்.
அப்போது, அங்கு வந்த இரண்டு மர்ம நபர்கள், முகத்தில் துணியை கட்டிக் கொண்டு, இருவரையும் கத்தியால் வெட்டிவிட்டு தப்பினர். காயமடைந்த இருவரும், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.வண்ணாரப்பேட்டை போலீசார் விசாரணையில், வேறு நபர்களுக்கு பதிலாக சரவணன், கோபியை வெட்டியது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் 'சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
போதை மாத்திரை விற்ற ஐவர் கைது
ஓட்டேரி: ஓட்டேரி, கிருஷ்ணதாஸ் 3வது தெருவில், ஓட்டேரி போலீசார் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, இளைஞர்கள் சிலர், அப்பகுதியில் போதை பொருட்களை பயன்படுத்தி ரகளை செய்தனர்.
அவர்களை சுற்றி வளைத்த போலீசார், அவர்களிடம் இருந்த 10 வலி நிவாரண மாத்திரைகள், ஒன்றரை கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.
அவர்களிடம் விசாரித்ததில், ஓட்டேரி கிருஷ்ணதாஸ் 3வது தெருவை சேர்ந்த விஷ்ணு, 19, சரத், 21, வசந்தகுமார், 23, தனுஷ், 22, விக்னேஷ், 20, என்பது தெரிய வந்தது. அவர்களை கைது செய்த ஓட்டேரி போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

