முதியவர் மர்ம மரணம்
ஓட்டேரி: ஓட்டேரி, வெங்கடேசன் தெரு பகுதியைச் சேர்ந்தவர் கலீல் ரஹ்மான், 64. நேற்று காலை, வீட்டின் கழிப்பறைக்கு சென்றவர் வெகு நேரமாகியும் வெளியே வரவில்லை.
உறவினர்கள், கதவை உடைத்து பார்த்தபோது, கலீல் மயங்கி கிடந்தார். அவரது தலையில் அடிபட்டிருந்தது. அவரை மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தபோது, டாக்டர் பரிசோதனையில், அவர் ஏற்கனவே இறந்தது தெரியவந்தது. ஓட்டேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
--
இரு பைக் திருட்டு
மதுரவாயல்: மதுரவாயல், கார்த்திகேயன் நகரைச் சேர்ந்த பிரின்ஸ் ஆபிரஹாம், 21. கல்லுாரி மாணவர். வீட்டின் முன் நிறுத்தியிருந்த இவரது இருசக்கர வாகனம், நேற்று காலை திருடுபோனது.
அதேபோல், அருகிலுள்ள கந்தசாமி நகரைச் சேர்ந்த 'ஏசி' மெக்கானிக் ஆகாஷ், 36, என்பவரின் இருசக்கர வாகனமும் திருடுபோனது. இரு புகார்களையும், மதுரவாயல் போலீசார் விசாரிக்கின்றனர்.
வழிப்பறி செய்த
வாலிபர் கைது
மதுரவாயல்: மதுரவாயல், அய்யப்பன் நகரைச் சேர்ந்தவர் பிரீத்தி, 26. கடந்த 26ம் தேதி இரவு, மதுரவாயல் ஏரிக்கரை பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, வீட்டிற்கு நடந்து சென்றார். அடையாளம் தெரியாத நபர், பிரீத்தியை கீழே தள்ளி, அவரது மொபைல் போனை பறித்து தப்பினார்.
மதுரவாயல் போலீசார் விசாரித்து, வழிப்பறியில் ஈடுபட்ட விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சுமன், 24, என்பவரை கைது செய்தனர். இவர் மீது, வானகரம் காவல் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கு உள்ளது.

