இரும்பு கம்பிகள் ஆட்டை: வாலிபருக்கு 'காப்பு'
ராயப்பேட்டை: ராயப்பேட்டை, ஸ்ரீபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஷியாம்பாபு, 36; ஐ.டி., ஊழியர். தன் வீட்டின் முன், கட்டுமான பணிக்கு இரும்பு கம்பிகளை வைத்திருந்தார்.
இங்கிருந்த இரும்பு கம்பிகளை, கடந்த 28ல் திருடிச் சென்ற, கண்ணகி நகரைச் சேர்ந்த அப்பு, 25, என்பவரை, ராயப்பேட்டை போலீசார் நேற்று பிடித்தனர். மெரினா கடற்கரையில் ராட்டினம் சுற்றும் தொழிலில் ஈடுபட்டு வரும் அப்பு, இரவு நேரங்களில் இரும்பு கம்பிகளை திருடி விற்று வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்தனர்.
வாகனங்களின் பேட்டரி திருடிய ஓட்டுநர் கைது
ராயப்பேட்டை: ராயப்பேட்டை புதுப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, 66, தன் வீட்டின் மாடிப்படியின் கீழ் வைத்திருந்த எட்டு இருசக்கர வாகனங்களின் பேட்டரிகளை, மர்ம நபர் திருடிச் சென்றார்.
விசாரித்த அண்ணா சாலை போலீசார், பேட்டரிகளை திருடிய ஆந்திர மாநிலம், நெல்லுாரைச் சேர்ந்த சங்கரையா, 60, என்பவரை நேற்று கைது செய்தனர். சென்னையில் தங்கி, சரக்கு வாகன ஓட்டுநராக பணிபுரிந்து வருவதும், திருடிய எட்டு பேட்டரிகளை விற்று, பணத்தை செலவு செய்து வந்ததும் தெரியவந்தது.
காய்கறி சந்தையில் மது விற்றவர் கைது
கோயம்பேடு: கோயம்பேடு காய்கறி சந்தையில், நேற்று முன்தினம், போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக நின்றவரிடம் விசாரித்தனர். அதில், பெரம்பலுார் மாவட்டத்தை சேர்ந்த ஆறுமுகம், 54, என்பதும், சட்டவிரோதமாக மது விற்றதும் தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.
இருசக்கர வாகனம் திருடியவர் சிக்கினார்
கோடம்பாக்கம்: சூளைமேடு, திருவள்ளுவர்புரத்தைச் சேர்ந்தவர் தினேஷ்குமார், 19; கல்லுாரி மாணவர். பகுதி நேரமாக ஆற்காடு சாலையில், இருசக்கர வாகன உதிரிபாகங்கள் விற்பனை கடையில் பணிபுரிகிறார்.
கடந்த 27ம் தேதி, கடை முன் நிறுத்தியிருந்த இவரது இருசக்கர வாகனம் திருடு போனது. விசாரித்த கோடாம்பாக்கம் போலீசார், வாகனத்தை திருடிய துாத்துக்குடியைச் சேர்ந்த காசிராஜா, 28, என்பவரை நேற்று கைது செய்தனர்.
குடிசை எரிந்து நாசம்: தப்பிய தாய், மகள்கள்
படப்பை: படப்பை அருகே வெள்ளேரிதாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் யாஷ்மின், 41; அப்பகுதியில் தள்ளுவண்டி உணவகம் நடத்தி வருகிறார்.
நேற்று அதிகாலை, தன் இரண்டு மகள்களுடன், குடிசையில் துாங்கி கொண்டிருந்தார். அதிகாலை 5:00 மணியளவில் குடிசையில் தீப்பற்றியது.
இதையறிந்த யாஷ்மின், மகள்களுடன் உடனே வெளியேறி கூச்சலிட்டார். படப்பை தீயணைப்பு நிலைய வீரர்கள் வந்து தீயை அணைத்தனர். ஆனால், அதற்குள் குடிசை எரிந்து நாசமானது.

