தம்பதியை தாக்கிய மேலும் இருவர் கைது
மதுரவாயல்: மதுரவாயல், தனலட்சுமி நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன், 22. 10ம் வகுப்பு பயிலும் இவரது மைத்துனரை தாக்கிய, உடன் படிக்கும் சிறுவர்களை மணிகண்டன் கண்டித்துள்ளார்.
கடந்த 28ல், தனலட்சுமி நகரில் மணிகண்டன், அவரது மனைவியுடன் பேசிக்கொண்டிருந்தார். அங்கு வந்த சிறுவர்களின் உறவினர்கள், தம்பதியை தாக்கினர்.
விசாரித்த போலீசார், மதுரவாயலை சேர்ந்த ஜானகிராமன், 22, என்பவரை, கடந்த 2ம் தேதி கைது செய்தனர். தலைமறைவான பூவரசன், 22, அந்தோணிராஜ், 20, ஆகியோரை, நேற்று கைது செய்தனர்.
36 லிட்டர் எண்ணெய்
திருடிய 2 பேர் சிக்கினர்
மேற்கு மாம்பலம்: மேற்கு மாம்பலம், ஸ்டேஷன் சாலையில் எண்ணெய் கடை நடத்தி வருபவர் ரோஜஸ், 50. இவரது கடையின் வெளியே வைக்கப்பட்டிருந்த 12 லிட்டர் அடங்கிய மூன்று எண்ணெய் கேன்களை, மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
அசோக் நகர் போலீசார் விசாரணையில், மேற்கு மாம்பலம், வாழைத்தோப்பு பகுதியைச் சேர்ந்த ஸ்ரீராம், 20, சஞ்சய், 20, ஆகியோர் திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது. நேற்று முன்தினம் இருவரையும் கைது செய்த போலீசார், எண்ணெய் கேன் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

