
லாரி மோதி முதியவர் உயிரிழப்பு
குன்றத்துார்: திருச்சியைச் சேர்ந்தவர் மதியழகன், 52. இவர், குன்றத்துார் - மாங்காடு சாலையில் லாரியை ஓட்டிச்சென்றார். தான் செல்ல வேண்டிய இடம் குறித்து, லாரியை மெதுவாக ஓட்டியவாறு அப்பகுதி கடைக்காரர்களிடம் விசாரித்தார். அப்போது, சாலையோரம் நடந்து சென்ற அதே பகுதியைச் சேர்ந்த பழனிசாமி, 70, என்பவர் மீது லாரி மோதியது. இதில், பலத்த காயமடைந்த பழனிசாமி, சம்பவ இடத்திலேயே பலியானார். குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், மதியழகனை கைது செய்தனர்.
ஜி.ஹெச்.,சில் ஸ்கூட்டர் திருடியவர் கைது
ஏழுகிணறு: தண்டையார்பேட்டையைச் சேர்ந்தவர் விஜய், 28. இவர், காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தையை, அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்திருந்தார். அங்கு 'பார்க்கிங்'கில் நிறுத்தப்பட்ட அவரது ஸ்கூட்டர் திருட்டு போனது. விசாரித்த ஏழுகிணறு போலீசார், திருட்டில் ஈடுபட்ட புளியந்தோப்பு, எம்.எஸ்., முத்து நகரைச் சேர்ந்த பிரேம்குமார், 30, என்பவரை நேற்று கைது செய்தனர்.
பஸ் மோதி வேலுார் நபர் உயிரிழப்பு
பூந்தமல்லி: சென்னையில் இருந்து வேலுார் நோக்கி, அரசு போக்குவரத்து கழக விழுப்புரம் கோட்ட பேருந்து, பயணியருடன் நேற்று காலை, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்றது. செம்பரம்பாக்கம் பகுதியை கடந்தபோது, சாலையை கடக்க முயன்றவர் மீது, பேருந்து மோதியது. சம்பவ இடத்திலேயே அவர் இறந்தார். ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில், உயிரிழந்தவர் வேலுார் மாவட்டத்தைச் சேர்ந்த நித்தியானந்தன், 52, என்பது தெரிய வந்தது.
பெண்களை தாக்கிய ரவுடி கைது
காசிமேடு: காசிமேடு பகுதியைச் சேர்ந்தவர், 35 வயது பெண். கடந்த 3ம் தேதி வீட்டின் அருகே வசித்து வரும் மற்ற பெண்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த பிரவீன், 23, என்பவர், 'ஏன் இங்கே உட்கார்ந்து பேசுகிறீர்கள், கிளம்புங்கள்' எனக் கூறியுள்ளார். இதுதொடர்பாக வாக்குவாதம் ஏற்படவே பிரவீன், அவர்களை அடித்துள்ளார். இது குறித்த புகாரை அடுத்து, காசிமேடு போலீசார் பிரவீனை கைது செய்தனர்.
வீடு புகுந்து பெண்ணிடம் 'சில்மிஷம்'
கொடுங்கையூர்: கொடுங்கையூர் ஆர்.ஆர்.நகர், 'சி - பிளாக்'கைச் சேர்ந்தவர் லோகநாதன். அவரது மனைவி சித்ரா, 46.
இவர் நேற்று முன்தினம் நள்ளிரவு வீட்டில் துாங்கிக் கொண்டிருந்தபோது, மர்ம நபர் ஒருவர் வீட்டின் ஓட்டை பிரித்து உள்ளே இறங்கி, சித்ராவிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். அவர் சத்தம்போடவே, அங்கிருந்து தப்பினார். இது குறித்த புகாரை அடுத்து கொடுங்கையூர் போலீசார் நேற்று வழக்கு பதிந்து, மர்ம நபரை தேடி வருகின்றனர்.
சாலை விபத்தில் ஒருவர் பலி
வேளச்சேரி: வேளச்சேரியில் இருந்து பள்ளிக்கரணை நோக்கி, ஹோண்டா ஷைன் வாகனத்தில், 45 வயது நகர், நேற்று மாலை வேகமாக சென்றுக் கொண்டிருந்தார். விஜயநகர், அடையாறு ஆனந்தபவன் ஹோட்டல் எதிரில் சென்றபோது, வாகனம் கட்டுப்பாட்டை இழந்து, பாலத்தின் பக்கவாட்டு சுவரில் மோதியது. இதில், துாக்கி வீசப்பட்டவர், தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார். அவர் யார், எந்த ஊர் என்ற விபரம் தெரியவில்லை. அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பெயின்ட் கடையில் மீண்டும் தீ விபத்து
பூந்தமல்லி: பூந்தமல்லி தீயணைப்பு வீரர்கள், தீயை அணைத்தனர். அதற்குள் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீக்கிரையாயின. நேற்று கடையை துாய்மைப்படுத்த திட்டமிடப்பட்டிருந்தது. அங்கிருந்த பெயின்ட், தின்னர் அடைக்கப்படிருந்த இரும்பு டப்பாக்கள் அகற்றப்படாமல் இருந்தன. அவற்றில் இருந்து, நேற்று காலையும் மீண்டும் தீ பற்றி எரிந்தது. பூந்தமல்லி தீயணைப்பு வீரர்கள் விரைந்து, தீயை அணைத்தனர். அதன்பின், கடையில் இருந்த அனைத்து பொருட்களையும் வெளியேற்றி சுத்தம் செய்யப்பட்டது. கடையில் மீண்டும் தீ விபத்து ஏற்பட்டது சலசலப்பை ஏற்படுத்தியது.
பெண்ணின் கழுத்தை அறுத்த கள்ளக்காதலன்
பெரவள்ளூர்: உத்திரமேரூரைச் சேர்ந்தவர் லதா 32. கணவரை பிரிந்த இவர், பெரவள்ளூர் ஜி.கே.எம்., காலனியில் உள்ள தன் அத்தை வீட்டில் வசித்து வந்துள்ளார். நேற்று மாலை, உத்திரமேரூரில் இருந்து வந்த அவரது கள்ளக்காதலன் வசந்த், என்பவருடன் லதா வீட்டின் மாடியில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது இருவருக்கும் தகராறு ஏற்படவே, வசந்த் வைத்திருந்த கத்தியால் லதாவின் கழுத்தை அறுத்து தப்பினார். அங்கிருந்தோர் லதாவை மீட்டு, பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பெரவள்ளூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

