வாலிபரை தாக்கிய இருவர் கைது
புளியந்தோப்பு: அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் சேட்டு, 31. கடந்த 27ம் தேதி 17 வயது சிறுவனை, சிகரெட் வாங்கி வர கூறியுள்ளார். அப்போது ஏற்பட்ட பிரச்னையில், சேட்டுவை நண்பர்களுடன் சேர்ந்து சிறுவன் தாக்கி உள்ளார். இந்த வழக்கில் சிறுவன் உட்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த அம்பேத்கர் நகரைச் சேர்ந்த விஜய், 19 மற்றும் சூர்யா, 20 ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டனர்.
தலைமறைவு குற்றவாளி சிக்கினார்
புளியந்தோப்பு: பி.கே.காலனியைச் சேர்ந்தவர் விக்னேஷ், 30. ரவுடியாக வலம் வந்த இவர் மீது பல வழக்குகள் உள்ளன. ஆனால், வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக வாழ்ந்து வந்தார். அவரை கைது செய்ய, நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்தது. புளியந்தோப்பு போலீசார் அவரை தேடி வந்த நிலையில், நேற்று சிக்கினார்.
வழிப்பறி திருடர்கள் பிடிபட்டனர்
திரு.வி.க., நகர்: வில்லிவாக்கத்தைச் சேர்ந்தவர் பிரசாத் தாஸ், 50. இவர், நேற்று திரு.வி.க., நகர் பேருந்து நிறுத்தம் அருகே நடந்து சென்றார். அப்போது, மர்ம நபர்கள் இருவர் கத்தியை காட்டி மிரட்டி 1,000 ரூபாய் பறித்துச் சென்றனர். திரு.வி.க., நகர் போலீசாரின் விசாரணையில், கொளத்துார் யுனைடெட் காலனியை சேர்ந்த வினோத்குமார், 34, பிரேம் குமார், 39 வழிப் பறியில் ஈடுபட்டது தெரிய வந்தது. போலீசார் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கஞ்சா, 'மாத்திரை' விற்ற 9 பேர் கைது
எம்.கே.பி.நகர்: கொடுங்கையூர், எருக்கஞ்சேரியில் போதை மாத்திரைகள் விற்பதாக, எம்.கே.பி.நகர் போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது.
போலீசார் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு, போதை மாத்திரைகள் விற்ற கொடுங்கையூர், எருக்கஞ்சேரி, இந்திரா நகரைச் சேர்ந்த பழைய குற்றவாளியான வினோதினி, 29, வியாசர்பாடி புவனேஸ்வரி, 21, கொடுங்கையூர் தென்னரசு, 20, வியாசர்பாடி அசோக்குமார், 20, திருமலை, 26 மற்றும் 17 வயது சிறுவர்கள் மூவர் உட்பட எட்டு பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்த, 1,300 போதை மாத்திரைகள், 1 கிலோ கஞ்சா மற்றும் 5 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டன. சிறுவர்களை சீர்திருத்த பள்ளியிலும், ஐவரை சிறையிலும் அடைத்தனர்.
மேலும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த பழைய குற்றவாளியான சரவணன், 37 என்பவரை கைது செய்து, 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

