ADDED : ஏப் 01, 2026 06:09 AM

கோவில் உண்டியல் உடைத்தவர் கைது
ஜெ.ஜெ.நகர்: அண்ணாநகர் மேற்கு விரிவாக்கம், ரவுண்ட் பில்டிங் பகுதியில் வெற்றி விநாயகர் மற்றும் முத்து மாரியம்மன் கோவில் உள்ளது.
கடந்த 23ம் தேதி இக்கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர், உண்டியலை உடைத்து, 15,000 ரூபாயை திருடி சென்றுள்ளார். விசாரித்த ஜெ.ஜெ.நகர் போலீசார், வில்லிவாக்கம், பாரதி நகரைச் சேர்ந்த அகஸ்டின், 43 என்பவரை, நேற்று முன்தினம் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மினி லாரி கவிழ்ந்து விபத்து
வேப்பேரி: வேப்பேரியைச் சேர்ந்தவர் பவீன்ராஜ், 24; லாரி ஓட்டுநர். இவர், நேற்று அதிகாலை மினி லாரியை டவுட்டன் மேம்பாலம் அருகே அதிவேகமாக ஓட்டிச் சென்றதாக கூறப்படுகிறது.
அப்போது கட்டுப்பாட்டை இழந்த லாரி, கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. கீழ்ப்பாக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், சாலையின் நடுவே கவிழ்ந்த லாரியை அப்புறப்படுத்தினர்.
சண்டையை விலக்க சென்றவர் மீது கல்வீச்சு
துரைப்பாக்கம்: பெருங்குடி, கல்லுக்குட்டையைச் சேர்ந்தவர் சத்தியபெருமாள், 48. இவரது வீட்டின் அருகில் வசிக் கும்; ராஜா, ஹரிகரன், 19, ஆகிய இருதரப்பினர் இடையே, நேற்று முன்தினம் இரவு தகராறு ஏற்பட்டது.
கைகலப்பு நடந்ததால், சத்தியபெருமாள் சமாதானம் செய்தார். அப்போது, ஹரிஹரன் கீழே கிடந்த கல்லை எடுத்து ராஜா மீது எறிந்தார்.
இதில், சத்தியபெருமாள் பலத்த காயமடைந்து, கே.கே.நகர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். துரைப்பாக்கம் போலீசார், ஹரிகரன், 19, என்பவரை கைது செய்தனர். தலைமறைவான நபர்களை தேடுகின்றனர்.
