ADDED : மே 31, 2026 03:44 AM
பைக் திருடிய நபர் கைது
மதுரவாயல்: மதுரவாயல், ஆலப்பாக்கம், கோவிந்தப்பன் பிரதான தெருவைச் சேர்ந்தவர் அஜித், 27. வீட்டில் நிறுத்தியிருந்த இவரது 'யமஹா ஆர் 15' இருசக்கர வாகனம், கடந்த 21ல் திருடுபோனது.
மதுரவாயல் போலீசார் விசாரித்து, இருசக்கர வாகனத்தை திருடிய கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினத்தை சேர்ந்த சுகன், 29, என்பவரை கைது செய்து, வாகனத்தையும் மீட்டனர்.
'ஏசி காப்பர்' குழாய் திருட்டு
வியாசர்பாடி: வியாசர்பாடி, சர்மா நகரைச் சேர்ந்தவர் கார்த்திக், 37; தனியார் நிறுவன ஊழியர். இவரது வீட்டில் பொருத்தியுள்ள 'ஏசி'யின் வெளிப்புறத்தில் உள்ள காப்பர் குழாய்களை, நேற்று முன்தினம் இரவு, மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
அதேபோல், ரகுராம், பன்னீர், தனலட்சுமி ஆகியோரது மூன்று வீடுகளிலும் பொருத்தப்பட்டிருந்த 'ஏசி'யில், காப்பர் குழாய்களையும், திருடியுள்ளனர். நான்கு பேரின் புகார் குறித்து, எம்.கே.பி.நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.
கஞ்சா கடத்திய 2 பேர் கைது
ஓட்டேரி: ஓட்டேரி, மங்களபுரம் ஆட்டோ நிறுத்தம் அருகே, திரிந்த பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த விகாஷ்குமார், 27, சன்னிகுமார், 21, ஆகியோரை, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், நேற்று மதியம் கைது செய்தனர். அவர்களிடம் 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். விசாரணையில், சென்னையில் சுமை துாக்கும் வேலை பார்த்துக் கொண்டு, பீஹாரில் இருந்து கஞ்சா கடத்தி வந்து சென்னையில் விற்று வந்தது தெரியவந்தது.
பணம் தராத நண்பருக்கு அடி
வண்ணாரப்பேட்டை: பிராட்வே, ஆண்டர்சன் தெருவைச் சேர்ந்தவர் அலிகான், 36. இவர், நண்பரான விஜயராகவன், 28, என்பவருடன் கடந்த 28ல் மது அருந்தினார்.
அப்போது, 'ஸ்நாக்ஸ்ʼ வாங்க பணம் கேட்டு, அலிகான் தரவில்லை. இதில், ஆத்திரமடைந்த விஜயராகவன், மது பாட்டிலால் அலிகானை தாக்கினார். எஸ்பிளனேடு போலீசார் விசாரித்து, திருவொற்றியூர் விஜயராகவனை கைது செய்தனர்.
விடுதியில் திருடிய இருவர் கைது
தேனாம்பேட்டை: தேனாம்பேட்டை, பிள்ளையார் கோவில் தெருவில், ஆண்கள் விடுதியில் தங்கியிருப்பவர் சிவா, 25; ஐ.டி., ஊழியர். கடந்த 28ல், நண்பர்களுடன் மது அருந்தி மயங்கினார்.
அடுத்த நாள் காலை, இவரது அறையில் இருந்து ஆறு மொபைல் போன்கள் திருடு போகின. தேனாம்பேட்டை போலீசார் விசாரித்து, தண்டையார்பேட்டையைச் சேர்ந்த வசந்தகுமார், 28, அருண் நாராயணன், 21, ஆகிய இருவரை நேற்று கைது செய்தனர்; மூன்று மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர்.
மாணவர் - போலீஸ் கைகலப்பு
வியாசர்பாடி: வியாசர்பாடி போக்குவரத்து போலீசில் உதவி ஆய்வாளர் கிருஷ்ணராஜ், 55, அம்பேத்கர் அரசு கலைக் கல்லுாரி அருகே, போக்குவரத்தை சீர்செய்யும் பணியில், நேற்று ஈடுபட்டார்.
அப்போது வியாசர்பாடி, சென்ட்ரல் அவென்யூவில் இருந்து டாக்டர் அம்பேத்கர் அரசு கலைக் கல்லுாரி நோக்கி தவறான வழியில், 'ஹோண்டா டியோ' இருசக்கர வாகனத்தில் வந்த, வியாசர்பாடியைச் சேர்ந்த தனியார் சட்ட கல்லுாரி மாணவரான ஒசானா பிரின்ஸ், 23, என்பவரை, கிருஷ்ணராஜ் பிடித்தார்.
தொடர்ந்து, சாலை விதிகளை மதிக்காமல் வந்த ஒசானா பிரின்ஸின் ஓட்டுநர் உரிமத்தை, எஸ்.ஐ., கிருஷ்ணராஜ் வாங்கியதால், இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இருதரப்பு புகாரை, எம்.கே.பி.நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
