ADDED : ஜூலை 12, 2026 03:36 AM

சுற்றுச்சுவர் இடிந்து மூதாட்டி பலி
கொளத்துார்: கொளத்துார் கங்கையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த செல்லம்மாள், 90, மகன் வெங்கடேசன், 58. இவர் வீட்டருகே வசிக்கும் மூர்த்தியின் வீட்டு வேலைக்காக, நேற்று காலை வேனில் கட்டட கழிவு எடுத்து வரப்பட்டது.
மூர்த்தி வீட்டு முன் கொட்டப்பட்ட கட்டட கழிவால், வெங்கடேசன் வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில் காயமடைந்த செல்லம்மாள், பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, நேற்று மதியம் இறந்தார். புகாரின்படி, கட்டட கழிவு கொட்டிய வேன் ஓட்டுநரான கார்த்திக், 34, என்பவரை, போலீசார் கைது செய்தனர்.
பெண்ணை சீண்டிய பொறியாளர் கைது
வேளச்சேரி: வேளச்சேரியைச் சேர்ந்த 23 வயது பெண், நேற்று முன்தினம் ஸ்கூட்டரில் காந்தி சாலை வழியாக சென்றபோது, வேறொரு பைக்கில் வந்து வழிமறித்த நபர், பெண்ணிடம் பாலியல் சீண்டல் செய்தார். வேளச்சேரி போலீசார் விசாரித்து, சீண்டலில் ஈடுபட்ட தனியார் கட்டுமான நிறுவன பொறியாளரான ஜான்பெர்மின், 28, என்பவரை நேற்று கைது செய்தனர்.
ரூ.5.80 லட்சம் மோசடி; ஒருவர் கைது
பெரவள்ளூர்: பெரவள்ளூரைச் சேர்ந்தவர் சுகன்யா லட்சுமி, 37. இவரது மகனுக்கு தனியார் மருத்துவக் கல்லுாரியில் 'சீட்' வாங்க, நண்பர் மூலம் அறிமுகமான சக்தி, 27, என்பவரிடம் 5.80 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். ஆனால், சீட் வாங்கித் தராமலும், பணத்தையும் திருப்பி வழங்காமலும் சக்தி ஏமாற்றியுள்ளார். திரு.வி.க.நகர் போலீசார் வழக்கு பதிந்து சக்தியை கைது செய்தனர்.
3வது தளத்திலிருந்து விழுந்து பெண் படுகாயம்
தேனாம்பேட்டை: தேனாம்பேட்டை எஸ்.எம்., நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசிக்கும் குப்பனின் மனைவி லட்சுமி, 40. நேற்று காலை, 3வது தள பால்கனியில் நின்று துணி காய வைக்க முயன்றபோது, சேதமடைந்து இருந்த பால்கனி சுவர் இடிந்து கீழே விழுந்தார். இதில், பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
பெண்ணுக்கு ஆபாச செய்தி; வியாபாரி கைது
வானகரம்: கோயம்பேடு காவல் மாவட்டத்துக்கு உட்பட்ட அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்த 45 வயது பெண், அதே பகுதியைச் சேர்ந்த வியாபாரி சமயதுரை, 40, என்பவரிடம் பல மாதங்களாக நெய் வாங்கி வந்தார். பெண்ணுக்கு அனுப்பிய இணைய பரிவர்த்தனை தகவலை பயன்படுத்தி, 'வாட்ஸாப்'பில் ஆபாச செய்தி அனுப்பி, சமயதுரை பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதை தட்டிக்கேட்ட அவரது கணவரை மரக்கட்டையால் தாக்கி கொலை மிரட்டலும் விடுத்தார். புகாரின்படி, சமயதுரையை போலீசார் கைது செய்தனர்.
சூப்பர் மார்க்கெட்டில் மொபைல் திருடியவர் கைது
கே.கே., நகர்: கே.கே.நகரில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் ஊழியர்கள் கவனிக்காத நேரத்தில் மூன்று புதிய மொபைல் போன்கள் திருடு போயின. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த அந்தோணி ஜோசப், 38, என்பவரை, போலீசார் கைது செய்து, திருடிய மொபைல் போன்களை மீட்டனர்.
எண்ணுார்: ஜூலை 12-: எர்ணாவூர், பெரியகாசி கோவில் குப்பத்தைச் சேர்ந்தவர் கவுதம், 15; பிளஸ் 1 மாணவர். அதே பகுதியைச் சேர்ந்த ஜோதீஸ்வரன், 15, உள்ளிட்ட நண்பர்களுடன் நேற்று, கடலில் குளித்தபோது, ராட்சத அலையில் சிக்கி கவுதம் உயிரிழந்தார்.
அவருடன் அலையில் சிக்கிய ஜோதீஸ்வரன், மீனவர்களால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறு கிறார். எண்ணுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
முதியவர் விரலில் சிக்கிய மோதிரம்
எண்ணுார்: எண்ணுார் காமராஜர் நகரைச் சேர்ந்தவர் ரவி, 53; மனநலம் பாதிக்கப்பட்டவர். நேற்று காலை, பவானி அம்மன் தெரு அருகே கீழே கிடந்த மோதிரத்தை எடுத்து, வலது கை விரலில் மாட்டியுள்ளார். பின், அதை கழற்ற முயன்றபோது வராததால், விரலில் வலி ஏற்பட்டது. இதைக் கண்ட அப்பகுதி மக்கள், எண்ணுார் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த வீரர்கள், கட்டர் இயந்திரம் மூலம் மோதிரத்தை லாவகமாக கத்தரித்து அகற்றினர்.
கடலில் மூழ்கி மாணவர் பலி
