ADDED : ஜூலை 14, 2026 06:37 AM

விபத்தில் வாகன ஓட்டி பலி; பெண் காயம்
தாம்பரம்: திருநீர்மலையைச் சேர்ந்த ஆனந்தராஜ், 35, கடப்பேரில் வனப்பகுதி சாலையில், நேற்று முன்தினம் பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
எதிரே வந்த ஆட்டோ மோதியதில் சம்பவ இடத்திலேயே ஆனந்தராஜ் பலியானார். படுகாயமடைந்த ஆட்டோ பயணியை, அவ்வழியே சென்றோர் மீட்டு தாம்பரம் மாவட்ட அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். விபத்து ஏற்படுத்திய ஆட்டோ ஓட்டுநரை, குரோம்பேட்டை போலீசார் தேடுகின்றனர்.
506 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்
தாம்பரம்: தாம்பரத்தில் இருந்து சேலையூர் நோக்கி சென்ற லோடு ஆட்டோவை, கிழக்கு தாம்பரம், சென்னை கிறிஸ்துவ கல்லுாரி அருகே, சேலையூர் போலீசார் நேற்று முன்தினம் நிறுத்தினர். 24 சாக்கு மூட்டைகளில் 506 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். வாகனத்தில் வந்த கிழக்கு தாம்பரத்தைச் சேர்ந்த ராமநாதன், 45, சேலையூர் பாலாஜி, 44, ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
தீப்பற்றி எரிந்த கார்; ஓனர் தப்பினார்
பாடி: பாடி, டி.எம்.பி., நகர், அவ்வை தெருவைச் சேர்ந்த மோகன், 43, தன் 'மஹேந்திரா எக்ஸ்.யூ.வி., 500' காரில் அமர்ந்து, நேற்று முன்தினம் பாடல் கேட்டு கொண்டிருந்தார். அவர் அதிலே உறங்கிய நிலையில், கார் இன்ஜின் பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறி தீப்பிடித்தது. சுதாரித்த மோகன் காரில் இருந்து இறங்கி தப்பினார்.
அந்த தெருவிற்குள் தீயணைப்பு வாகனம் செல்ல முடியாதபடி கார் மற்றும் பைக்குகள் நிறுத்தப்பட்டிருந்தன. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள், தலா 100 மீட்டர் நீளம் உடைய ஏழு தண்ணீர் குழாய்களை ஒன்றிணைத்து, 15 நிமிடம் போராடி, தீயை அணைத்தனர்.
போதை பொருள்: 7 நாளில் 94 பேர் கைது
சென்னை: போதைப் பொருட்களுக்கு எதிராக, சென்னை போலீசார் சிறப்பு சோதனை செய்தனர். இதில், ஏழு நாட்களில் 57 வழக்குகள் பதிந்து, 94 பேரை கைது செய்தனர்.அவர்களிடம் இருந்து 80.272 கிலோ கஞ்சா, 19 கிராம் ஹெராயின், 1,068 வலி நிவாரணி மாத்திரை உள்ளிட்ட போதை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
கண்ணகி நகர் காவல் நிலைய எல்லையில், கஞ்சா, போதை மாத்திரை, புகையிலை விற்ற 50 பேர் மற்றும் எட்டு ரவுடிகள் என, ஒரு மாதத்தில் 58 பேரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.
கஞ்சா விற்ற வாலிபர்கள் மீது வழக்கு
வண்ணாரப்பேட்டை: -ஏழுகிணறு, சிறைச்சாலை சாலையில் உள்ள ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லுாரி மைதானத்தில், மது அருந்திய தண்டையார்பேட்டை பகுதியைச் சேர்ந்த அசாருதீன், 21, அப்துல் மஜீத், 19, முகமது பைசல், 19, ஆகியோரை, போலீசார் பிடித்தனர்; அவர்களிடம் கஞ்சா பொட்டலங்கள் இருந்தன.
இவர்களுக்கு கஞ்சா தந்த பாபன், 32, குருபடா, 19, சவுரவ், 19, ஆகியோரும் பிடிபட்டனர். இதில் அசாருதீன், பாபன் உட்பட நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, காவல் நிலைய ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். அப்துல் மஜீத், முகமது பைசல் ஆகியோரை எச்சரித்து அனுப்பினர்.
**
உணவக உரிமையாளரை தாக்கியவர் கைது
அசோக் நகர்: கோடம்பாக்கத்தில் வசிக்கும் மணி, 27, ரங்கராஜபுரம் பிரதான சாலையில் நடமாடும் வாகனத்தில் உணவகம் நடத்தி வருகிறார்.
கடந்த 9ம் தேதி கடை அருகே மணியை தாக்கிய மனோஜ், 21, என்பவரை, அசோக் நகர் போலீசார் கைது செய்தனர். விக்னேஸ்வரன் உட்பட இருவரை தேடுகின்றனர். முன்விரோதத்தால் இந்த அடிதடி நடந்துள்ளது.
