ADDED : ஜூலை 14, 2026 06:45 AM
கார் கண்ணாடியை உடைத்தோருக்கு வலை
தாம்பரம்: பழைய பெருங்களத்துாரில் ஹிந்து சேனா மாநில ஒருங்கிணைப்பாளர் ராமசுப்ரமணியனின் வீட்டருகே நிறுத்தப்பட்டிருந்த காரின் பின்பக்க கண்ணாடியை மர்ம நபர்கள் உடைத்தனர். குடும்பத்துடன் வெளியூருக்கு சென்றிருந்த அவருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். புகாரின் பேரில், பீர்க்கன்காரணை போலீசார் வழக்குப்பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
வாலிபரை கொல்ல முயன்ற இருவர் கைது
கோயம்பேடு: கோயம்பேடு, பாரதியார் நகர், அண்ணா தெருவைச் சேர்ந்த ஆபேல், 22; மேளம் அடிக்கும் தொழிலாளி. கவிராஜ், 27, என்பவருடன் முன்பகை இருந்தது. கவிராஜ், கார்த்திகேயன், 23, என்பவருடன் சேர்ந்து ஆபேலை கத்தியால் வெட்ட முயன்றனர். புகார்படி இருவரையும் போலீசார் கைது செய்தனர். வழக்கில் தொடர்புடைய 17 வயது சிறுவன் அரசு கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டார். கவிராஜ் மீது ஏற்கனவே கொலை முயற்சி, திருட்டு உள்ளிட்ட ஐந்து வழக்குகள் இருப்பது விசாரணையில் தெரிந்தது.
கிணறு துார்வாரிய இருவர் மயக்கம்
குன்றத்துார்: குன்றத்துார் அருகே நந்தம்பாக்கத்தைச் சேர்ந்த குமார், 55, எட்டியப்பன், 56, ஆகியோர், அதே பகுதியில் வீட்டுக் கிணற்றை துார்வாரும் பணியில் ஈடுபட்டிருந்தனர். 40 அடி ஆழத்தில் இறங்கி சுத்தம் செய்தபோது திடீரென மயக்கமடைந்தனர்.தாம்பரம் தீயணைப்பு வீரர்கள், கயிறு மூலம் இருவரையும் மீட்டு தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருமுடிவாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாலிபரின் விரலை கடித்தவர் கைது
சாஸ்திரி நகர்: பரமேஸ்வரி நகரைச் சேர்ந்த ரஞ்சித், 36, மற்றும் பக்கத்து வீட்டைச் சேர்ந்த கண்ணன் இடையே வீடு விற்பனை விவகாரத்தில் பிரச்னை இருந்தது. நேற்று முன்தினம் நடந்த தகராறில், கண்ணனின் மருமகன் சண்முககணபதி, 28, ரஞ்சித்தை தாக்கினார். தடுக்க முயன்ற ராஜ்மோகன், 27, என்பவரின் விரலையும் கடித்தார். காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சாஸ்திரி நகர் போலீசார் நேற்று, சண்முக கணபதியை கைது செய்தனர்.
குடும்ப தகராறில் பெண் தற்கொலை
ஓட்டேரி: ஓட்டேரி, ஏகாங்கிபுரத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி, 42, கணவர் இறந்த நிலையில், ஆட்டோ ஓட்டுநர் அமல்ராஜுடன் கடந்த 11 ஆண்டுகளாக சேர்ந்து வசித்து வந்தார்.
அமல்ராஜ் அடிக்கடி மது அருந்திவிட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட தகராறுக்குப் பின், ராஜேஸ்வரி வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரது மகள் ஜான்சிராணி வந்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்தது உறுதியானது. புகாரின்படி வழக்குப்பதிவு செய்த ஓட்டேரி போலீசார் விசாரிக்கின்றனர்.
