UPDATED : ஜூலை 14, 2026 08:52 PM
ADDED : ஜூலை 14, 2026 08:02 PM
ஆலந்துார்: கோபாலபுரத்தைச் சேர்ந்த 25 வயது பெண் வழக்கறிஞர், நேற்று முன்தினம் இரவு ஆலந்துாரில் உள்ள ஸ்டார் ஹோட்டலில் நண்பர்களுடன் மது அருந்தி நடனமாடியுள்ளார். அப்போது, அருகில் ஆடிய இருவர், அவர் மீது உரசியுள்ளனர். அப்பெண் தகாத வார்த்தைகளால் பேசியதால், ஆத்திரமடைந்த இருவரும் அப்பெண்ணின் சட்டையை பிடித்து அநாகரிகமாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து விசாரித்த பரங்கிமலை போலீசார், ஐ.டி., ஊழியரான கோடம்பாக்கத்தைச் சேர்ந்த அஜித், 25, திருச்சியைச் சேர்ந்த பிரசாந்த், 26, ஆகியோரை கைது செய்தனர்.
செக் மோசடி: தலைமறைவு நபர் சிக்கினார்
பெரம்பூர்: புளியந்தோப்பைச் சேர்ந்தவர் ராகவேந்திரன், 38. இவரிடம், 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வியாசர்பாடியைச் சேர்ந்த பன்பழகன், 54 என்பவர், 3 லட்ச ரூபாய் கடனாக வாங்கியுள்ளார். ஆனால், வாங்கிய பணத்தை திருப்பித்தராமல், பன்பழகன் போலி காசோலைகளை வழங்கி ஏமாற்றியுள்ளார். இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த பன்பழகனை, செம்பியம் போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
***
வழிப்பறியில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுநர் கைது
கோடம்பாக்கம்: கோடம்பாக்கம், காமராஜர் காலனியைச் சேர்ந்தவர் ஜோனா பெர்டினாண்ட், 38. இவர், நேற்று முன்தினம் இரவு, காமராஜர் காலனி வழியாக நடந்து சென்றபோது, இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் வழிமறித்து தாக்கி, 8,000 ரூபாயை பறித்தனர். இது குறித்து விசாரித்த கோடம்பாக்கம் போலீசார், வழிப்பறியில் ஈடுபட்ட பூபதி நகரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான விமல்ராஜ், 31, என்பவரை கைது செய்தனர். மற்றொரு நபரை தேடி வருகின்றனர்.
* பெரம்பூர், புழல் முருகேசன் தெருவைச் சேர்ந்தவர் ஸ்ரீதர்; கார் ஓட்டுநர். இவர் நேற்று முன்தினம் கொளத்துார் பாரதி சாலையில் சென்ற இவரை, போதையில் இருந்த மர்ம நபர்கள் நான்கு பேர் தாக்கி, மொபைல்போன், 3,000 ரூபாயை பறித்துச் சென்றனர். விசாரித்த செம்பியம் போலீசார் 17 முதல் 18 வயதுடைய நான்கு பேரை கைது செய்தனர்.
தம்பியை கத்தியால் குத்திய அண்ணன் கைது
குன்றத்துார்: குன்றத்துார் அருகே சிறுகளத்துார், கெலடிப்பேட்டை, அம்பேத்கர் தெருவைச் சேர்ந்த சகோதரர்கள் கண்ணன், 38, ராஜிவ்காந்தி, 33; பெயின்டர்கள். கண்ணனின் மனைவி பிரிந்து சென்ற விவகாரத்தில், சகோதரர்கள் இடையே நீண்டநாளாக தகராறு இருந்து வந்தது. நேற்று முன்தினம் ஏற்பட்ட வாக்குவாதத்தில், ஆத்திரமடைந்த கண்ணன், தம்பி ராஜிவ்காந்தியின் மார்பில் குத்தி, முழங்காலிலும் வெட்டினார். காயமடைந்த ராஜிவ்காந்தி சிகிச்சை பெறுகிறார். திருமுடிவாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.
