UPDATED : ஜூலை 25, 2026 10:19 PM
ADDED : ஜூலை 25, 2026 08:52 PM
படப்பை: குன்றத்துார் அருகே படப்பை பகுதியைச் சேர்ந்த தேவகி, 75, நேற்று முன்தினம் இரவு, வீட்டுக்கு வெளியே சென்றபோது, அறுந்து கிடந்த மின்சார ஒயரை எதிர்பாராத விதமாக மிதித்ததில், மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.
'பாஸ்ட் புட்' கடையை சூறையாடியவர் கைது
பழவந்தாங்கல்: நங்கநல்லுார் ஹிந்து காலனியில் விஜய் செல்வானந்த், 29, என்பவர் நடத்திவரும் துரித உணவக கடைக்கு, கடந்த 19ம் தேதி இரவு வந்த மூவர், உணவு கேட்டுள்ளனர். உணவு காலியானதாக ஊழியர்கள் தெரிவித்ததால், ஆத்திரமடைந்த மூவர், கடையை அடித்து நொறுக்கினர்.
பழவந்தாங்கல் போலீசார் விசாரித்து, தகராறில் ஈடுபட்ட ஆலந்துாரைச் சேர்ந்த ராஜீவ், 23, என்ற ரவுடியை, நேற்று கைது செய்தனர்; மற்ற இருவரை தேடுகின்றனர்.
ஓட்டேரியில் வாலிபர் தீக்குளிப்பு
ஓட்டேரி: ஓட்டேரி பகுதிக்கு உட்பட்ட அயனாவரம் பகுதியைச் சேர்ந்த, மாநகராட்சி குப்பை லாரி ஓட்டுநர் ரமேஷுக்கும், 36, அவரது மனைவி சுஷ்மிதாவுக்கும், குடும்ப சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் சுஷ்மிதா, அவரது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். நேற்று முன்தினம் இரவு, வீட்டில் தனியே இருந்த ரமேஷ், தின்னரை உடலில் ஊற்றி தீக்குளித்தார். அப்பகுதியினர் அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 65 சதவீத தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
'சீல்' வைத்த கட்டடத்தில் திருடிய 2 பேர் கைது
கே.கே.,நகர்: வளசரவாக்கம், இந்திரா நகரைச் சேர்ந்த சிவகுமார், 49, என்பவருக்கு சொந்தமான கட்டடம், ஆழ்வார் திருநகர் லம்பார்ட் நகரில் உள்ளது. இக்கட்டடம் சம்பந்தமான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால், மாநகராட்சியால் 'சீல்' வைக்கப்பட்டிருந்தது.
கடந்த 17ல், இந்த கட்டடத்தில் புகுந்து கதவு, இரும்பு மற்றும் அலுமினிய பொருட்கள் திருடிய கரண் என்ற வெள்ளை, 19, பிரசாந்த், 23, ஆகிய இருவரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.
காஸ் சிலிண்டர் திருடியவர் கைது
தேனாம்பேட்டை: ஆழ்வார்பேட்டை: ஆழ்வார்பேட்டை, சீதாம்மாள் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் வாகன நிறுத்ததில் வைத்திருந்த சமையல் காஸ் சிலிண்டர் திருடுபோனது. கோபாலகிருஷ்ணன், 77, என்பவர் புகாரை விசாரித்த தேனாம்பேட்டை போலீசார், சிலிண்டரை திருடிய திருவல்லிக்கேணியைச் சேர்ந்த முத்து, 49, என்பவரை கைது செய்தனர்.
மாணவியிடம் போன் பறித்தவர் கைது
மெரினா: மயிலாப்பூர் பகுதியைச் சேர்ந்த, 18 வயது இளம்பெண், அதே பகுதி மகளிர் கல்லுாரியில் இளங்கலை பயில்கிறார்.
கடந்த, 23ல் கல்லுாரி முடித்து, ராதாகிருஷ்ணன் சாலை வழியாக போனில் பேசியபடி நடந்து சென்றார். அங்கு வந்த மர்ம நபர், இளம்பெண்ணின் மொபைல் போனை பறித்து தப்பினார். மெரினா போலீசார் விசாரித்து, மொபைல் பறிப்பில் ஈடுபட்ட, திருவல்லிக்கேணியைச் சேர்ந்த சுந்தர், 23, என்பவரை நேற்று கைது செய்தனர். இவர், சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த ஊழியர்.
பழுதான டிரெய்லர் லாரியால் நெரிசல்
செங்குன்றம்: திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையத்தில் இருந்து காற்றாலை இறக்கிய ஏற்றிய டிரெய்லர் லாரி, துாத்துக்குடி புறப்பட்டது.
செங்குன்றம் --- திருவள்ளூர் கூட்டுச்சாலையில் இருந்து சென்னை -- கொல்கட்டா ஜி.என்.டி., சாலை சந்திப்பில் வந்தபோது லாரி பழுதாகி, சாலை நடுவே நின்றது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதித்தது. செங்குன்றம் போலீசார், வாகனங்களை மாற்றுப்பாதையில் செல்ல அனுமதித்தனர். இதனால் ஜி.என்.டி., சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.
