ADDED : ஆக 20, 2026 03:05 AM
ரூ.40 லட்சம் மோசடி: வாலிபருக்கு வலை
ஆயிரம்விளக்கு: ' எலக்ட்ரிக் வாகன வாடகை வருமான திட்டம்' என்ற கவர்ச்சிகரமான விளம்பரம் செய்து, ஆறு பேரிடம் இருந்து, 40 லட்சம் பெற்று மோசடி செய்ததாக அண்ணா நகரைச் சேர்ந்த பாலமுருகன், 37, என்பவர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 'ஸ்பென்சர் பிளாசா' வணிக வளாகத்தில் அவர் நடத்தி வரும் 'டாரு இன்போடெக்' அலுவலகம் பூட்டியே கிடக்கிறது. போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
மருத்துவமனையில் நோயாளி தற்கொலை
கீழ்ப்பாக்கம்: திருவேற்காட்டைச் சேர்ந்த வெங்கட்ராமன், 45, கணையம் பாதிப்பு காரணமாக, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் இரவு வந்தார். உள்நோயாளியாக அனுமதித்து சிகிச்சை அளிக்குமாறு கேட்டபோது, உறவினர்களை அழைத்து வரும்படி டாக்டர்கள் கூறியுள்ளனர். இந்த நிலையில் அவர், மருத்துவமனையில் அறுவை சிகிச்சை வார்டு பணியிடத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
