ADDED : ஆக 27, 2026 06:13 PM
ஆந்திரா கஞ்சா வியாபாரி சுற்றிவளைப்பு
ஓட்டேரி: ஓட்டேரி, புளியந்தோப்பு பகுதிகளில் கஞ்சா வழக்குகளில் கைது செய்யப்பட்ட நபர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், ஆந்திராவைச் சேர்ந்த கஞ்சா வியாபாரி உபேந்திரா, 25 என்பவரை போலீசார் தேடி வந்தனர். அவரை பிடிக்க கஞ்சா வியாபாரி போர்வையில், போலீசார் நேற்று முன்தினம் இரவு ஓட்டேரிக்கு வரவைத்துள்ளனர். 18 கிலோ கஞ்சாவுடன் சென்னை வந்த அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.
***
கொத்தனாரை வெட்டிய ரவுடிகளுக்கு ‘காப்பு’
வியாசர்பாடி: புளியந்தோப்பு, கன்னிகாபுரத்தைச் சேர்ந்தவர் சோமசுந்தர ராவ், 50; கொத்தனார். நேற்று முன்தினம் இரவு நண்பர் திருப்பதி என்பவருடன், வியாசர்பாடி, சி.கல்யாணபுரத்தில் உள்ள டீக்கடையில் டீ அருந்தியுள்ளார். அப்போது ஒரு சிலர் கத்தியுடன் ஒரு நபரை விரட்டி வந்தனர். அந்த நபர் டீக்கடை அருகே வந்தபோது ‘எஸ்கேப்’ ஆகியுள்ளார். ஆத்திரமடைந்த கும்பல் டீக்கடையில் இருந்த சோமசுந்தர ராவ்வை வெட்டினர். இதில் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில் ஸ்டான்லி அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சோமசுந்தர ராவ்வை வெட்டியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
***
பெயின்டரை தாக்கிய இருவருக்கு வலை
புளியந்தோப்பு: புளியந்தோப்பு, கிரே நகரைச் சேர்ந்தவர் சரவணன், 45; பெயின்டர். இவர், பெரியார் நகர் பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள ரிக் ஷாவில் படுப்பது வழக்கம். நேற்று அதிகாலை துாங்கிக் கொண்டிருந்த சரவணனிடம், அவருக்கு அறிமுகமான பிரேம் மற்றும் ஒரு பெண் சேர்ந்து 500 ரூபாய் மற்றும் மொபைல்போனை திருடி தப்ப முயன்றனர். திடீரென கண்விழித்து பார்த்த சரவணன் சத்தம் போடவே, அவரை காலி பாட்டிலால் தாக்கி தப்பினர். இது குறித்து பேசின்பாலம் போலீசார் விசாரிக்கின்றனர்.
