ADDED : செப் 03, 2026 05:22 PM
மாடி படிக்கட்டில் இருந்து விழுந்தவர் பலி
வியாசர்பாடி: வியாசர்பாடி, தாமோதரன் நகரைச் சேர்ந்தவர் நாகரத்தினம், 43; சுமை துாக்கும் தொழிலாளி. தாய் இறந்த நிலையில், மூன்று ஆண்டுகளாக சகோதரி மகாலட்சுமி வீட்டில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு 10:30 மணியளவில், மது போதையில் இரண்டாம் தள மொட்டை மாடிக்கு துாங்க சென்றதாக கூறப்படுகிறது. படிக்கட்டு வழியாக ஏறும்போது கால் இடறி கீழே விழுந்துள்ளார். இதில், தலையில் பலத்த காயமடைந்த அவரை, ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவர்களின் பரிசோதனையின்போது, இறந்தது தெரியவந்தது. எம்.கே.பி., நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.
––––––––––––––––
திருடனும், காயலான் கடைக்காரரும் கைது
அண்ணா நகர்: அண்ணா நகர் ‘வி பிளாக்’ 10வது தெருவில் அலுவலகம் நடத்தி வருபவர் சக்திவேல், 40. கடந்த 26ம் தேதி அலுவலகத்திற்கு சென்றபோது, ‘பார்க்கிங்’ ஏரியாவில் தண்ணீர் தேங்கியிருந்தது. அங்கிருந்த தண்ணீர் குழாய்களின் இரண்டு ‘டாப்’ உடைக்கப்பட்டு, திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. அண்ணா நகர் போலீசாரின் விசாரணையில், வில்லிவாக்கம், சிட்கோ நகரைச் சேர்ந்த தீபக், 25, சிக்கினார். திருடிய குழாய்களை, எம்.எம்.டி.ஏ., காலனியைச் சேர்ந்த காயலான் கடைக்காரர் முகமது காசிம், 58, என்பவரிடம் விற்றதும் தெரியவந்தது. இருவரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். தீபக் மீது ஏற்கனவே, இருசக்கர வாகனங்கள் திருட்டு உட்பட ஐந்து வழக்குகள் உள்ளன. அதில் இரண்டு வாகனங்கள் மீட்கப்பட்டன.
–––––––––––––––––
‘ஸ்கூட்டர்’ பறித்து தப்பிய சிறுவர்கள் கைது
வியாசர்பாடி: வியாசர்பாடியைச் சேர்ந்தவர் தனுஷ், 22. கடந்த 22ம் தேதி இரவு 10:30 மணியளவில், ஸ்கூட்டரில் வியாசர்பாடி அம்பேத்கர் கல்லுாரி சாலையில் சென்றார். அப்போது, மற்றொரு ஸ்கூட்டரில் வந்த இருவர், ‛வண்டியில் பெட்ரோல் இல்லை; பெட்ரோல் பங்க் வரை, ‛டோப்’ செய்ய முடியுமா’ எனக் கேட்டுள்ளனர். ‘தனக்கு தெரியாது’ என தனுஷ் கூறியுள்ளார். இதையடுத்து, தனுஷை தங்களின் ஸ்கூட்டரில் ஏற வைத்து, இருவரும் ஸ்கூட்டரை ‛டோப்’ செய்வது போல நடித்து, திடீரென தனுஷின் ஸ்கூட்டருடன் தப்பினர். இது குறித்து விசாரித்த வியாசர்பாடி போலீசார், நுாதனமாக ஸ்கூட்டரை பறித்து சென்ற பெரம்பூர், கொளத்துாரைச் சேர்ந்த 17 வயது சிறுவர்கள் இருவரை, நேற்று முன்தினம் கைது செய்து, சிறார் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.
