ADDED : செப் 09, 2026 07:03 PM
வாகனங்களை சேதப்படுத்திய நபருக்கு வலை
காசிமேடு: காசிமேடு, திருவள்ளுவர் நகருக்கு, நேற்று அதிகாலை 2:00 மணியளவில், டூ – வீலரில் வந்த மர்ம நபர், பட்டாக்கத்தியால் அங்கு நிறுத்தப்பட்டிருந்த நான்கு ‘டாடா ஏஸ்’ லோடு வாகனம், மூன்று ஆட்டோக்கள், நான்கு ‘டி.வி.எஸ்., ஜூபிடர்’ ஸ்கூட்டர்கள், ‘ஹோண்டா யூனிகார்ன்ʼ பைக் உள்ளிட்ட வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தினார். வாகனங்களின் உரிமையாளர்கள் அளித்த புகாரை அடுத்து, காசிமேடு போலீசார் விசாரிக்கின்றனர்.
பெண்ணை தாக்கிய வாலிபருக்கு ‘காப்பு’
புதுவண்ணாரப்பேட்டை: தண்டையார்பேட்டையைச் சேர்ந்த 42 வயது பெண், கணவர் இறந்த நிலையில், இரு மகன்களுடன் தனியே வசிக்கிறார். இரு நாட்களுக்கு முன், எதிர்வீட்டில் வசிக்கும் கணேஷ், 28, அவரது மனைவி திவ்யா இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, வீட்டு வாசலில் அமர்ந்திருந்த, 42 வயது பெண்ணிடம் வீண் தகராறு செய்து, கணேஷ் தாக்கினார். அப்பெண் புகாரை அடுத்து, புதுவண்ணாரப்பேட்டை போலீசார், கணேஷை நேற்று கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
பிளஸ் 1 மாணவி துாக்கிட்டு தற்கொலை
கொளத்துார்: கொளத்துார், கிழக்கு தெருவைச் சேர்ந்த 15 வயது பிளஸ் 1 மாணவி, மாதவரத்தில் உள்ள பள்ளியில் பயின்று வந்தார். உடல் நிலை சரியில்லை எனக்கூறி, மாணவி நேற்று பள்ளிக்கு செல்லவில்லை. தாய் உள் அறையில் துாங்கிய நேரம் பார்த்து, வீட்டு ஹாலில் துாக்கிட்டு மாணவி தற்கொலை செய்து கொண்டார். கொளத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.
கஞ்சா விற்ற நால்வர் கைது
வண்ணாரப்பேட்டை: வண்ணாரப்பேட்டை போஜராஜன் நகரில் உள்ள மைதானத்தில் நின்றிருந்த திருவொற்றியூர், காலடிப்பேட்டையைச் சேர்ந்த சந்துரு, 24, பழைய வண்ணாரப்பேட்டை அப்துல் அமித், 30, தாஜிதீன், 20, கொடுங்கையூர் அமீர் உசேன், 19, ஆகியோரை பிடித்து, வண்ணாரப்பேட்டை போலீசார் விசாரித்தனர்.
அவர்களிடமிருந்து, 1.5 கிலோ கஞ்சா, போதை வஸ்துவான 30 வலி நிவாரண மாத்திரை மற்றும் 4,450 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்களை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
ஆட்டோ ஓட்டுனரிடம் போன் பறிப்பு
காசிமேடு: புதுவண்ணாரப்பேட்டை, இருசப்பன் மேஸ்திரி தெருவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சரவணன், 53, நேற்று காலை, காசிமேடு – அண்ணா நகர் கடற்கரையில் குளித்து, துணி மாற்றிக் கொண்டிருந்தார்.
அங்கு வந்த இருவர், அவரை தாக்கி, சட்டை பையில் இருந்த மொபைல் போன், 1,800 ரூபாயை பறித்து தப்பினர். காசிமேடு மீன்பிடி துறைமுகம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
