UPDATED : செப் 10, 2026 06:15 PM
ADDED : செப் 10, 2026 06:14 PM
ஆலந்துார்: ஆலந்துார், நந்தம் சுபேதார் தெருவில், லாட்டரி சீட்டு வைத்து சூதாட்டம் நடத்திய கண்ணன், 52, நன்மங்கலத்தைச் சேர்ந்த பக்கீர் மொய்தீன், 65, ஆகியோரை, பரங்கிமலை போலீசார் நேற்று கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
வாலிபர் துாக்கிட்டு தற்கொலை
புளியந்தோப்பு: புளியந்தோப்பு, போலுநாயக்கன் தெருவைச் சேர்ந்தவர் பிரவீன்ராஜ், 21. மூன்று மாதங்களாக வேலைக்கு செல்லாமல், வீட்டில் இருந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு குளியலறைக்கு சென்றவர், அங்குள்ள இரும்பு கம்பியில் துண்டால் துாக்கிட்டு தொங்கினார். குடும்பத்தினர் அவரை மீட்டு, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கும் முன் இறந்தார்.
வேன் கண்ணாடி உடைத்த இருவர் கைது
வியாசர்பாடி: வியாசர்பாடி, எம்.கே.பி.நகர் பகுதியைச் சேர்ந்த கார்த்திக், 41, மூர்த்திங்கர் தெருவில், நேற்று முன்தினம் நிறுத்தியிருந்த 'டாடா ஏஸ்' மற்றும் 'மகேந்திரா பொலீரோ' ரக வாகனங்களின் கண்ணாடிகளை, மது போதையில் வந்த நால்வர், கட்டையால் அடித்து நொறுக்கினர். வியாசர்பாடி போலீசார் விசாரித்து, வியாசர்பாடி சுரேஷ், 25, பிரவீன், 22, ஆகிய இருவரையும், நேற்று கைது செய்தனர்.
போதை பொருள் வைத்திருந்த இருவர் கைது
மயிலாப்பூர்: திருவல்லிக்கேணி, வல்லப அக்ரஹாரம் தெருவில் சந்தேகிக்கும் வகையில் திரிந்த, திருநின்றவூரைச் சேர்ந்த சூர்யா, 28, பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த பங்கஜ்குமார் ராஜ், 25, ஆகியோரை, போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார், நேற்று காலை பிடித்தனர். அவர்களை கைது செய்த போலீசார், 6.07 கிராம் மெத் ஆம்பெட்டமைன் போதைப் பொருளை பறிமுதல் செய்தனர்.
தலைமறைவு ரவுடி கைது
காசிமேடு: புளியந்தோப்பு, குருசாமி நகரைச் சேர்ந்தவர் ராம்கி என்ற ராம்குமார், 33; ரவுடி. கடந்த 2020ல் வழிப்பறி வழக்கில், காசிமேடு போலீசாரால் கைதான ராம்குமார், ஜாமினில் வெளியே வந்து தலைமறைவானார். கடந்த 2ம் தேதி பிடிவாரன்ட் பிறப்பித்ததை அடுத்து, தலைமறைவாக இருந்த ராம்குமாரை, நேற்று முன்தினம் போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
தொழிலாளியை தாக்கிய இருவர் கைது
பெருங்களத்துார்: மேற்கு தாம்பரம், முடிச்சூர் சாலையைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர், 38; வெல்டிங் தொழில் செய்து வருகிறார். இவருக்கும் ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த பூங்கொடி, 45, என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, சண்டையாகி உள்ளது. நேற்று முன்தினம், பூங்கொடியின் வீட்டிற்கு சென்ற ஜெய்சங்கர், அவரிடம் வாக்குவாதம் செய்தார். அப்போது, பூங்கொடி, அவருக்கு பழக்கமான தாமோதரன், 33, ஆகியோர், இரும்பு கம்பியால் ஜெய்சங்கரை தாக்கினர். தலையில் பலத்த காயமடைந்த ஜெய்சங்கர் மருத்துவமனையில் உள்ளார். பீர்க்கன்காரணை போலீசார், இருவரையும் நேற்று கைது செய்தனர்.
