/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தினசரி தொடரும் இரவு நேர மின் தடை... அவதி! மின்மாற்றிகள் மீது பழிபோடும் வாரியம்
/
தினசரி தொடரும் இரவு நேர மின் தடை... அவதி! மின்மாற்றிகள் மீது பழிபோடும் வாரியம்
தினசரி தொடரும் இரவு நேர மின் தடை... அவதி! மின்மாற்றிகள் மீது பழிபோடும் வாரியம்
தினசரி தொடரும் இரவு நேர மின் தடை... அவதி! மின்மாற்றிகள் மீது பழிபோடும் வாரியம்
ADDED : செப் 25, 2024 11:48 PM

சென்னை : சென்னையில் தினசரி இரவு 10:00 மணிக்கு மேல் மணிக்கணக்கில் மின் தடை தொடர்வதால், மக்கள் துாங்க முடியாமல் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். பழைய மின்மாற்றிகள், மின் பெட்டிகள் உள்ளிட்டவற்றை முழுமையாக மாற்றாததால், இந்நிலை தொடர்வதாக, மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னையின் சில இடங்களில் தரைக்கு அடியில் கேபிள், மற்ற இடங்களில் மின் கம்பம் மேல் செல்லும் கம்பி வாயிலாக மின்சாரம் வினியோகிக்கப்படுகிறது.
சென்னையின் மின் தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு மின்சாரம் கிடைக்கிறது. எனினும், மின் சாதனங்களின் பழுதால், தினசரி மின் தடை ஏற்பட்டு வருகிறது.
குறிப்பாக, சென்னை மற்றும் புறநகரில் திருவொற்றியூர், மணலி, கிண்டி, விருகம்பாக்கம், பள்ளிக்கரணை, மேடவாக்கம், மடிப்பாக்கம், தாம்பரம், வண்டலுார், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, சோழிங்கநல்லுார் உள்ளிட்ட பகுதிகளில், இரவு, 10:00 மணிக்கு மேல் மின் தடை வழக்கமாகி விட்டது.
வளசரவாக்கம், ராமாபுரம், மதுரவாயல் உள்ளிட்ட பகுதிகளில், மதியம் அல்லது இரவு நேரத்தில், குறைந்தது 30 நிமிடங்கள் வரை மின் தடை ஏற்படுகிறது.
ராமாபுரத்தில் நேற்று முன்தினம் இரவும், நேற்று காலை 11:00 மணி முதல் 12:00 மணி வரையும் மின் தடை ஏற்பட்டது.
சோழிங்கநல்லுாரில் செம்மஞ்சேரி, நுாக்கம்பாளையம் இணைப்பு சாலையில் இரவு நேரத்தில் பல மணி நேரம் மின்தடை ஏற்படுவதால், பகுதிவாசிகள் துாக்கம் இல்லாமல் தவிக்கின்றனர். வீடுகளில் வைத்துள்ள இன்வெர்ட்டரும் கைகொடுக்க முடியாத அளவுக்கு பல மணி நேரம் மின் தடை நீடிப்பதாக அப்பகுதியினர் குற்றம்சாட்டுகின்றனர்.
இப்பிரச்னையால், ஐ.டி., நிறுவனங்கள் உள்ள பகுதியில், தொழில் சார்ந்த பணிகளும் பாதிக்கப்படுகின்றன.
வேளச்சேரி, தரமணி, மடுவங்கரை, கோட்டூர்புரம் பகுதியிலும் அன்றாடம் மின்தடை ஏற்படுகிறது. தரமணி, கண்ணகி நகர், செம்மஞ்சேரி, மின்பகிர்மான பெட்டிகள் தீ பிடிக்கும் சம்பவங்கள், அடிக்கடி நடக்கின்றன.
தாம்பரம் மாநகராட்சியில் ராஜகீழ்ப்பாக்கம், ஸ்டெல்லஸ் அவென்யூ, கோகுல் நகர், சத்திய சாய் நகர் ஆகிய பகுதிகளில், 10 நாட்களாக இரவில் தொடரும் மின் தடையால் பலரும் பாதிக்கப்படுகின்றனர்.
அலுவலகம் முடிந்து, அசதியுடன் இரவு வீடு திரும்பும் பலர், மின் தடையால் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். குழந்தைகளும், மூத்த குடிமக்களும் துாங்க முடியாமல் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
துணைமின் நிலையங்கள், மின்மாற்றிகள், மின் வினியோக பெட்டிகள் போன்றவற்றில், 24 மணி நேரமும் மின்சாரம் செல்கிறது. அவற்றில் பழுது ஏற்படாமல் இருக்க, குறிப்பிட்ட இடைவெளியில் பராமரிப்பு பணி செய்யப்படுகிறது. இதற்காக, அந்த பணி நடக்கும் இடங்களில், காலை முதல் மாலை வரை மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது.
பல இடங்களில் பராமரிப்பு பணிகள் அவசர கதியிலும், அலட்சியமாகவும் நடப்பதாக தெரியவந்து உள்ளது. இதனால் தான், பல இடங்களில் மின் தடை, மின்னழுத்த பிரச்னைகள் ஏற்படுகின்றன. எனவே, பராமரிப்பு பணி நடக்கும் இடங்களில் மேற்பார்வை, செயற்பொறியாளர்கள் தொடர்ந்து ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
மின் வாரிய அதிகாரிகளிடம் கேட்ட போது, அவர்கள் கூறியதாவது:
மார்ச், ஏப்., மே மாதங்களை போல் இம்மாதமும், வெயில் சுட்டெரித்தது. இதனால், வீடுகளில், 'ஏசி' சாதன பயன்பாடு அதிகரித்ததால், மின் சாதனங்களில் திடீரென, 'ஓவர்லோடு' காரணமாக, மின் தடை ஏற்பட்டது. அதுவும் விரைந்து சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
மின்னகம் நுகர்வோர் சேவை மையம், சமூக வலைதளங்கள், மின்னஞ்சல் என, பல்வேறு சேவைகள் வாயிலாக புகார்கள் பெறப்படுகிறது. எனவே, மின் தடை ஏற்படும் போது, சம்பந்தப்பட்ட நுகர்வோர் புகார் அளித்தால், உடனே நடவடிக்கை எடுக்கப்படும்.
மின்மாற்றிகள், மின் பெட்டிகள் உள்ளிட்ட உபகரணங்கள் பழையது என்பதால், அதிக அழுத்த மின்சாரத்தை தாங்காமல் மின் தடை ஏற்படுவது தொடர்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
45 லட்சம்
மின் நுகர்வோர்
சென்னை, புறநகர்
6 கோடி
மின் நுகர்வு யூனிட்
தினமும் சராசரி
10.17 யூனிட்
மே 31ல் மின் நுகர்வு
புதிய உச்சம்
ஆண்டு - அதிகபட்ச மின் நுகர்வு / கோடி யூனிட்கள்
2021 7.66
2022 -- 8.29
2023 - 9.27
2024 - 10.17