UPDATED : நவ 10, 2024 07:26 AM
ADDED : நவ 10, 2024 12:34 AM
எம்.ஜி.ஆர்., நகர்: சென்னை, எம்.ஜி.ஆர்., நகர், சூளைப்பள்ளம் கனகசபை தெருவை சேர்ந்தவர் ஆதி லட்சுமி, 64. இவருடைய மகள் திரிலோக சுந்தரி, 43.
இருவர் இடையே சொத்து பிரச்னை இருந்து வந்தது. இதனால் இருவருக்கும் இடையே அடிகடி தகராறு ஏற்படுவதும், போலீஸ் நிலையத்திற்கு சமரசத்திற்கு செல்வதும் தொடர்ந்தது.
இந்நிலையில், பெற்ற தாய் என்றும் பாராமல் ஆதி லட்சுமியை மகள் திரிலோக சுந்தரி கடந்த 6ம் தேதி கொடூரமாக தாக்கி, கழுத்தையும் நெரித்துள்ளார். இதில் காயமடைந்த ஆதிலட்சுமி, கே.கே., நகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, எம்.ஜி.ஆர்., நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
மூதாட்டி ஆதி லட்சுமியை அவர் மகள் திரிலோக சுந்தரி கொடூரமாக தாக்கும் காட்சிகள் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தன. இதையடுத்து, சொத்து பிரச்னைக்காக, பெற்ற தாயை கொடூரமாக தாக்கிய திரிலோக சுந்தரியை போலீசார் கைது செய்தனர்.