பிளஸ் 2 மாணவர்களுக்கான 'தினமலர்' வழிகாட்டி நிகழ்ச்சி; சென்னையில் இன்று துவக்கம்
பிளஸ் 2 மாணவர்களுக்கான 'தினமலர்' வழிகாட்டி நிகழ்ச்சி; சென்னையில் இன்று துவக்கம்
ADDED : மார் 28, 2026 04:31 AM

சென்னை : பிளஸ் 2 தேர்வெழுதி, எதிர்கால படிப்புக்காக காத்திருக்கும் மாணவர்களுக்கு, துறை சார்ந்த வல்லுனர்களின் வாயிலாக வழிகாட்டும், 'தினமலர்' வழிகாட்டி நிகழ்ச்சி, இன்றும், நாளையும் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் உள்ள கன்வென்ஷன் சென்டரில் நடக்கவுள்ளது.
'தினமலர்' நாளிதழ் சார்பில், பிளஸ் 2 மாணவர்களுக்கு, கல்வி, வேலைவாய்ப்பு சார்ந்த ஆலோசனைகள் வழங்கும் 'வழிகாட்டி' நிகழ்ச்சி, ஆண்டுதோறும் நடக்கிறது.
இந்த ஆண்டுக்கான நிகழ்ச்சி, இன்றும் நாளையும், காலை 10:00 முதல் மாலை 6:30 மணி வரை, சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடக்கவுள்ளது.
இதில், 20க்கும் மேற்பட்ட துறைகளின் நிபுணர்கள், கல்வியாளர்கள் பங்கேற்று, மாணவர்களுக்கு ஆலோசனைகள் வழங்க உள்ளனர்.
ஏ.ஐ., எனும் செயற்கை நுண்ணறிவின் எதிர்காலம், அது சார்ந்த படிப்புகள், ஐ.டி., துறை சார்ந்த வேலை வாய்ப்புகள், நீட், ஜே.இ.இ., உள்ளிட்ட நுழைவுத்தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து நிபுணர்கள் விளக்குவர்.
உயர் கல்விக்கான உதவித் தொகை, கல்விக்கடன் பெறும் நடைமுறைகள் குறித்தும், சம்பந்தப்பட்ட துறையைச் சேர்ந்தவர்கள் விளக்குவர்.
நிகழ்ச்சியில் பங்கேற்கும் மாணவ - மாணவியர் மற்றும் பெற்றோர், தாங்கள் விரும்பும் கல்லுாரி, படிப்புகள் குறித்து நேரடியாக விசாரித்து அறிந்து கொள்ளும் வகையில், 100க்கும் மேற்பட்ட கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளின் அரங்குகளும் இடம் பெற்றிருக்கும்.
அங்கு சென்று, அங்குள்ள படிப்புகள், சேர்க்கை நெறிமுறைகள், கல்விக்கட்டணம், உதவித்தொகை உள்ளிட்ட விபரங்களை விசாரித்து அறியலாம்.
ஏ.ஐ., ரோபோடிக்ஸ், ஏ.ஆர்., - வி.ஆர்., உள்ளிட்ட நவீன தொழில்நுட்ப கண்காட்சியும் இடம்பெறும். இதில் பங்கேற்கும் மாணவர்களை உற்சாகப்படுத்தும் வகையில், 'லேப்டாப், டேப், ஸ்மார்ட் வாட்ச்' ஆகிய பரிசுகளும் வழங்கப்படும்.
இந்நிகழ்ச்சியை, 'தினமலர்' நாளிதழுடன் இணைந்து, ஸ்ரீ கிருஷ்ணா இன்ஸ்டிடியூஷன், ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனம், அம்ரிதா விஸ்வவித்யாலயா ஆகியவை நடத்துகின்றன.
