ADDED : அக் 23, 2024 01:01 AM

அமைந்தகரை, அக். 23-
சீரமைக்க, உடைக்கப்பட்ட 40 ஆண்டுகள் பழமையான வடிகாலை, ஒரு மாதமாகியும் சீரமைக்காததால், அமைந்தகரை பகுதிவாசிகள் அதிருப்தியில் உள்ளனர்.
சென்னையில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. மழைக்கு முன் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை பணிகளை, மாநகராட்சி முறையாக செய்யாமல், மழைக்காலத்தில் பணிகளை செய்து வருகிறது.
குறிப்பாக, அண்ணா நகர் மண்டலம், 102வது வார்டில், அமைந்தகரை, பாரதிபுரம் உள்ளது. இங்கு, மொத்தம் நான்கு தெருக்களில், ஆயிரக்கணக்கானோர் வசிக்கின்றனர்.
அமைந்தகரை கூவம் அருகில் உள்ள இக்குடியிருப்பின் இரண்டாவது தெருவில், 40 ஆண்டுகள் பழமையான மழைநீர் வடிகால் உள்ளது. இதை சீரமைப்பதாகக் கூறி, கடந்த மாதம் மாநகராட்சியினர் உடைத்தனர்.
இதனால், வீடுகளின் நுழைவாயிலில் பள்ளம் உள்ளதால், விபத்து அபாயம் நிலவுகிறது. இந்த வடிகாலில் தேங்கியுள்ள நீரால், கொசு தொல்லை அதிக அளவில் உள்ளதாக, குடியிருப்புவாசிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
மழைக்காலம் என்பதால், பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
