/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
முதியோரை காக்க வைத்த தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள்
/
முதியோரை காக்க வைத்த தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள்
ADDED : மார் 07, 2024 12:19 AM

புழல், புழல் அடுத்த கிராண்ட்லைன் ஊராட்சியில், தனியார் தொண்டு நிறுவன முதியோர் இல்லம் உள்ளது. அதில், பெண்கள், முதியோர் என, 80 பேர் உள்ளனர்.
முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளையடுத்து, அவர்களுக்கு, புழல் ஒன்றிய தி.மு.க., சார்பில், நேற்று மதியம் 12:00 மணிக்கு அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதை, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் சுதர்சனம், கிருஷ்ணசாமி, புழல் ஒன்றிய தி.மு.க., செயலர் சரவணன் ஆகியோர் துவக்கி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதற்காக, 11:30 மணிக்கே உணவு தயாராக இருந்தது. அங்கிருந்த முதியோர், உடல் நலம் குன்றியோர் அனைவரும் தயாராக இருந்தனர். ஆனால் மதியம், 1:50 மணி வரை, எம்.எல்.ஏ.,க்கள் வரவில்லை.
முதலில், எம்.எல்.ஏ., கிருஷ்ணசாமி வந்தார். சுதர்சனம் வந்த பின் உணவு வழங்கும் நிகழ்ச்சியை துவக்கலாம் என்று, நாற்காலியில் அமர்ந்து, வெயிலுக்கு இதமாக இளநீர் குடித்துக் கொண்டிருந்தார்.
அதன் பின், 2:00 மணி அளவில் சுதர்சனம், ஒன்றிய செயலர் சரவணன் ஆகியோர் அங்கு வந்தனர்.
அப்போதும், உணவு வழங்காமல் 'நீங்களே துவக்கி வைத்திருக்கலாமே' என, கிருஷ்ணசாமியிடம் சுதர்சனம் கூறினார். அதற்கு கிருஷ்ணசாமி, 'மாவட்ட செயலர் வராமல் எப்படி துவக்குவது' என, பாசத்துடன் அவரை மடக்கினார்.
பசியால் காத்திருந்து நொந்து போன முதியோர், தங்கள் வேதனையை வெளியில் சொல்ல முடியாமல், புன்னகைத்தபடி உணவை பெற்றுச்சென்றனர்.

