sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 தேர்தல் நேரத்தில் தி.மு.க., அமைச்சர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டிய இடத்தில் இருப்பர்: பழனிசாமி

/

 தேர்தல் நேரத்தில் தி.மு.க., அமைச்சர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டிய இடத்தில் இருப்பர்: பழனிசாமி

 தேர்தல் நேரத்தில் தி.மு.க., அமைச்சர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டிய இடத்தில் இருப்பர்: பழனிசாமி

 தேர்தல் நேரத்தில் தி.மு.க., அமைச்சர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டிய இடத்தில் இருப்பர்: பழனிசாமி


ADDED : ஜன 31, 2026 05:36 AM

Google News

ADDED : ஜன 31, 2026 05:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: ''அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், மாற்றுத்திறனாளிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படும்,'' என, அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி அறிவித்தார்.

சென்னை எம்.ஜி.ஆர்., நகரில், நேற்று நடந்த, எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில், அவர் பேசியது:

தொழில் முதலீடுகளை ஈர்க்க எனக்கூறி, வெளிநாடு சென்ற முதல்வர் ஸ்டாலின், அங்கு சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்தார். அதற்கு எதற்கு வெளிநாடு செல்ல வேண்டும். புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடுகின்றனர்.

ஆனால், அவை செயல்பாட்டுக்கு வரவில்லை. தி.மு.க., ஆட்சியில், எங்கும், எதிலும் ஊழல் தான். கடந்த ஐந்து ஆண்டுகளில், 4 லட்சம் கோடி ரூபாயை, தி.மு.க., கொள்ளையடித்துள்ளது. ஊழல் செய்வதில், கொள்ளையடிப்பதில், தி.மு.க.,தான் முதலிடத்தில் உள்ளது.

நகராட்சி நிர்வாகத் துறையில் நடந்த ஊழல் குறித்து, வழக்குப் பதிவு செய்ய, அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியும், தமிழக காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தி.மு.க., அமைச்சர்கள், தி.மு.க.,வினர் பலர், தேர்தல் நேரத்தில், பத்திரமாக இருக்க வேண்டிய இடத்தில் இருப்பர். செந்தில் பாலாஜி முன்னாள் அமைச்சராகி விட்டாலும், அவர்தான் டாஸ்மாக் நிர்வாகத்தை, கவனித்து வருகிறார்.

டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு, 10 ரூபாய் அதிகம் வாங்குவதால், தினமும் 15 கோடி ரூபாய், மாதம் 450 கோடி ரூபாய், ஆண்டுக்கு 5,400 கோடி ரூபாய், நான்கு ஆண்டுகளில் 22,000 கோடி ரூபாய் மேலிடத்திற்கு சென்றுள்ளது. இதையெல்லாம் கண்டுபிடித்து தான், அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. அ.தி.மு.க., கூட்டணி ஒற்றுமையாக உள்ளது.

பா.ஜ., பா.ம.க., தினகரனுடன் கூட்டணி அமைக்க மாட்டோம் என நினைத்தனர். கூட்டணி அமைத்து விட்டோம். அதை பொறுக்க முடியாமல், ஏதேதோ பேசி வருகின்றனர். தீய சக்தி தி.மு.க.,வை வீழ்த்தவே கூட்டணி அமைத்துள்ளோம். தி.மு.க., அரசின் ஆயுள் இன்னும் இரண்டு மாதங்கள்தான்.

தி.மு.க.,விடம் கொத்தடிமையாக உள்ள, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோவுக்கு. அ.தி.மு.க.,வை விமர்சிக்க தகுதியில்லை. அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஆட்டோ வாங்க 75,000 ரூபாய் மானியம், பெண்களுக்கு தீபாவளிக்கு சேலை வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

'டிஜிட்டல்' திரை விழுந்து பெண் காயம்

பொதுக்கூட்டத்தை நேரடி ஒளிபரப்பு செய்ய டிஜிட்டல் திரை அமைக்கப்பட்டிருந்தது. நேற்று காலை, நிகழ்ச்சிக்கான நாற்காலிகளை ஏற்றி வந்த வாகனத்தில், டிஜிட்டல் திரையின் கேபிள் சிக்கியது. அப்போது, டிஜிட்டல் திரை சரிந்து, அவ்வழியாக நடந்து சென்ற பெண் மீது விழுந்தது. தலையில் பலத்த காயமடைந்த அப்பெண்ணை, அங்கிருந்தவர்கள் மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, அவரது தலையில் ஐந்து தையல்கள் போடப்பட்டன.

எம்.ஜி.ஆர்., நகர் போலீசாரின் விசாரணையில், காயமடைந்தவர் பிருந்தாவன் தெருவைச் சேர்ந்த கவிதா, 40, என்பதும், எம்.ஜி.ஆர்., நகர் அரசு மேல்நிலைப் பள்ளியில் சத்துணவு உதவியாளராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது.






      Dinamalar
      Follow us