ADDED : ஜூலை 12, 2026 03:19 AM
தமிழ்நாடு இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை குழு செயலர் புருஷோத்தமன் பேசியதாவது:
இன்ஜினியரிங் கவுன்சிலிங் தொடர்பான அனைத்து தகவல்களும், தமிழக தொழில்கல்வி இயக்ககம் சார்பில், https://www.tneaonline.org/ என்ற இணையதளத்தில் பதிவேற்றப் பட்டுள்ளது.
இந்த இணையதளத்தில் உள்ள கல்லுாரிகள்தான், ஏ.ஐ.சி.டி.இ., மற்றும் அண்ணா பல்கலை பதிவுகளை பெற்றவை. அவற்றின் கடந்தகால செயல்பாடுகளும் பதிவேற்றப்பட்டு உள்ளன. அதை, மாணவர்களும், பெற்றோரும் அறிந்துகொள்வது நல்லது.
இன்ஜினியரிங் சேர்க்கைக்கு உதவும் வகையில், மாவட்டம் தோறும் இரண்டு உதவி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அங்கு சென்றும் விண்ணப்பிக்கலாம்.
ஒவ்வொரு மாணவருக்கும், 'யூசர் ஐடி' எனும் பிரத்யேக பயனர் அடையாள எண், 'பாஸ்வேர்டு' எனும் ரகசிய குறியீடு எண் இருக்கும். அவற்றை மாணவர்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும்.
எந்த மொபைல் எண் வழங்குகிறோமோ, அதற்கு ஒ.டி.பி., எனும் ஒருமுறை குறியீடு அனுப்பப்படும். எனவே மொபைல் போனை எளிதில் அணுகும் வகையில் வைத்திருக்க வேண்டும். யாரிடமும், யூசர் ஐ.டி., பாஸ்வேர்டை பகிர வேண்டாம்.
சிறப்பு கவுன்சிலிங், நாளையும், நாளை மறுநாளும் நடக்கும். அரசு பள்ளி மாணவர்களுக்கான, 7.5 சதவீத இடஒதுக்கீடுக்கு, 13, 14ம் தேதிகளிலும்; சிறப்பு பிரிவினருக்கான பொது கவுன்சிலிங், 15, 16, 17, 18ம் தேதிகளிலும் நடக்கும். பொது பிரிவினருக்கான கவுன்சிலிங் ஜூலை, 20ல் தொடங்கும். மாணவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும்.
ஒருவர் எத்தனை கல்லுாரிகளை வேண்டுமானாலும் தேர்வு செய்யலாம். மூன்று நாட்கள் அவகாசத்தில், கல்லுாரியை இறுதி செய்யலாம். தொடர்ந்து, சேர்க்கை, கட்டணம் உள்ளிட்ட நடைமுறைகளை, ஒதுக்கப்பட்ட நாட்களில் முடித்துவிடுவது நல்லது.
இவ்வாறு, அவர் பேசினார்.
