குடிநீரில் கழிவுநீர் கலப்பு தரமணியில் ஆர்ப்பாட்டம்
குடிநீரில் கழிவுநீர் கலப்பு தரமணியில் ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 09, 2026 07:43 PM
தரமணி: தரமணியில் குடிநீரில் கழிவுநீர் கலப்பதாக, பகுதிமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அடையாறு மண்டலம், 178வது வார்டு, தரமணி பகுதியில் ஒரு மாதமாக குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாக, பகுதிமக்கள் புகார் கூறினர். ஆனால், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதை கண்டித்து, நேற்று, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்; சுகாதாரமான குடிநீர் வினியோகிக்க வேண்டும் என, கோஷம் எழுப்பினர்.
தரமணி போலீசார் மற்றும் குடிநீர் வாரிய அதிகாரிகள், அவர்களிடம் பேச்சு நடத்தினர்.
அதில், மோட்டார் பொருத்தி குடிநீரை திருடும் சிலரால், பலர் பாதிக்கப்படுகின்றனர். மோட்டார்களை பறிமுதல் செய்து வருகிறோம். பழைய குழாய்கள் புதுப்பிக்கும் நிலையில் இல்லை. அடுத்த மாதம், புதிய குழாய் பதிக்கும் பணி தொடங்கும். அதன்பின், குடிநீரில் கழிவுநீர் கலப்பு பிரச்னை இருக்காது என, அதிகாரிகள் கூறியதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர்.
