/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இ.சி.ஆர்., ஆறுவழி மேம்பால சாலை திட்டத்திற்கு கிடுக்கிப்பிடி! ரூ.2,100 கோடி பணியை ஒப்படைக்க ஐகோர்ட் தடை
/
இ.சி.ஆர்., ஆறுவழி மேம்பால சாலை திட்டத்திற்கு கிடுக்கிப்பிடி! ரூ.2,100 கோடி பணியை ஒப்படைக்க ஐகோர்ட் தடை
இ.சி.ஆர்., ஆறுவழி மேம்பால சாலை திட்டத்திற்கு கிடுக்கிப்பிடி! ரூ.2,100 கோடி பணியை ஒப்படைக்க ஐகோர்ட் தடை
இ.சி.ஆர்., ஆறுவழி மேம்பால சாலை திட்டத்திற்கு கிடுக்கிப்பிடி! ரூ.2,100 கோடி பணியை ஒப்படைக்க ஐகோர்ட் தடை
UPDATED : பிப் 04, 2026 05:26 AM
ADDED : பிப் 04, 2026 05:06 AM

சென்னை: இ.சி.ஆர்., எனும் கிழக்கு கடற்கரை சாலையில், திருவான்மியூர் முதல் உத்தண்டி வரையில், 2,100 கோடி ரூபாய் மதிப்பிலான ஆறுவழி மேம்பால சாலைப் பணியை, தேர்வு செய்யப்படும் ஒப்பந்த நிறுவனத்திடம் ஒப்படைக்க, சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. நிறுவனம் தேர்வில் குளறுபடி தொடர்பான வழக்கால், திட்டப் பணிகளை துவங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சென்னை - புதுச்சேரி இடையிலான கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. அக்கரை முதல் புதுச்சேரி வரை சாலையை ஆறு வழியாக விரிவாக்கம் செய்யும் பணிகளை, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மேற்கொண்டு வருகிறது.
14.2 கி.மீ.,
திருவான்மியூர் - உத்தண்டி வரை 14.2 கி.மீ.,க்கு உயர்மட்ட மேம்பாலச்சாலை அமைக்க, மாநில நெடுஞ்சாலை ஆணையம் திட்டமிட்டுள்ளது. இச்சாலை அமைக்கப்பட்டால், 15 நிமிடங்களில் திருவான்மியூரில் இருந்து உத்தண்டி செல்ல முடியும்.
டெண்டர்
இந்த திட்டத்திற்கு தமிழக அரசு, 2,100 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. கட்டுமான பணியை மேற்கொள்ள கடந்தாண்டு ஆக., 24ல், மாநில நெடுஞ்சாலைகள் ஆணையம் டெண்டர் கோரியது.
டெண்டரில், போபாலைச் சேர்ந்த, 'திலீப் பில்ட்கான் லிமிடெட்' என்ற நிறுவனமும் பங்கேற்றது. ஆனால், உரிய நிபந்தனைகளை பூர்த்தி செய்யவில்லை எனக்கூறி, அந்நிறுவனத்தின் விண்ணப்பத்தை, தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலைகள் ஆணையம் நிராகரித்தது.
இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், திலீப் பில்ட்கான் லிமிடெட் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
அந்நிறுவனம் தாக்கல் செய்த மனு:
கடந்த 1987ல் நிறுவப்பட்ட நிறுவனம், கோரக்பூர் இணைப்பு விரைவுச்சாலை, பெங்களூரு- நிடகட்டா ஆறு வழிச்சாலை, சந்திகோல்-பத்ரக் ஆறு வழிச்சாலை போன்ற பல்வேறு திட்டங்களின் பணிகளை வெற்றிகரமாக முடித்துள்ளது.
கோவாவில் உள்ள சுவாரி ஆற்றின் மீது சுவாரி பாலத்தையும் கட்டி உள்ளது.
ஆனால், ஏற்கனவே கேரளாவில் தேசிய நெடுஞ்சாலை - 66ல் பணிகளை சரியாக செய்யாததால், தேசிய நெடுஞ்சாலை துறையால் கருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ள, ஹைதராபாதைச் சேர்ந்த கே.என்.ஆர்.கன்ஸ்ட்ரக்ஷன் என்ற நிறுவனத்துக்கு டெண்டர் தரப்பட்டுள்ளது.
உத்தரவு
இந்த நிறுவனத்துக்கு டெண்டரை வழங்கும் வகையில், தேதிகள் மாற்றம் என, பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு உள்ளன. இது விதிகளுக்கு முரணானது. நிறுவன தேர்வை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி, டெண்டரை இறுதி செய்யும் முன், வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளதாகக் கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார்.
விசாரணை
இந்த உத்தரவை எதிர்த்து, திலீப் பில்ட்கான் நிறுவனம், தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கை, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு விசாரித்தது.
அப்போது, 'கிழக்கு கடற்கரை சாலையை, ஆறு வழி மேம்பால சாலையாக அமைப்பதற்கான பணிக்கு தேர்வு செய்யப்படும் நிறுவனத்துக்கு ஒப்பந்த பணிகளை வழங்கக் கூடாது' என நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை, வரும் 12ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

