/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பயணியரை குறிவைத்து திருடும் முதியவர் கைது
/
பயணியரை குறிவைத்து திருடும் முதியவர் கைது
ADDED : ஜூன் 19, 2025 12:15 AM

தாம்பரம், மண்ணிவாக்கத்தைச் சேர்ந்தவர் சூரியா கலா, 41. ஏப்., 28ம் தேதி, கோவில்பட்டி செல்வதற்காக, மண்ணிவாக்கத்தில் இருந்து, ஷேர் ஆட்டோ மூலம் தாம்பரம் ரயில் நிலையத்திற்கு வந்தார்.
ஆட்டோவிற்கான பணம் கொடுப்பதற்காக கை பையை பார்த்தபோது, கிழிக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். அந்த பையில் இருந்த, மகனின் மருத்துவ செலவிற்கான 2.40 லட்சம் ரூபாய் மாயமானதும் தெரியவந்தது.
இது குறித்து, தாம்பரம் உதவி கமிஷனர் நெல்சன் தலைமையிலான போலீசார் விசாரித்தனர். முதற்கட்டமாக பயணியரிடம் திருடும் நபர்களின் விபரங்களை சேகரித்தனர். இதில், அனகாபுத்துாரைச் சேர்ந்த ஜான், 61, என்பவர், திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது.
போலீசார் நேற்று முன்தினம் அவரை கைது செய்தனர். விசாரணையில், 2021ம் ஆண்டு சிறைக்கு சென்ற பின், 'இனி எந்த ஒரு குற்ற சம்பவத்திலும் ஈடுபட மாட்டேன்' உத்தரவாதம் அளித்த ஜான், சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு, மீண்டும் திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அரசு பேருந்து, ஷேர் ஆட்டோகளில் வரும் பயணியரை மட்டும் குறிவைத்து திருடி வந்ததும் தெரியவந்தது. அவரிடம் இருந்து, 2.40 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
ஜான் மீது கண்ணகி நகர், துரைப்பாக்கம், குரோம்பேட்டை, தாம்பரம், பல்லாவரம் என, 15க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.