/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அமைந்தகரை கூவம் கரையோரம் மீண்டும் ஆக்கிரமிப்பு அதிகரிப்பு
/
அமைந்தகரை கூவம் கரையோரம் மீண்டும் ஆக்கிரமிப்பு அதிகரிப்பு
அமைந்தகரை கூவம் கரையோரம் மீண்டும் ஆக்கிரமிப்பு அதிகரிப்பு
அமைந்தகரை கூவம் கரையோரம் மீண்டும் ஆக்கிரமிப்பு அதிகரிப்பு
ADDED : பிப் 23, 2024 12:25 AM

அமைந்தகரை, அமைந்தகரை கூவம் கரையோரத்தில் மீண்டும் ஆக்கிரமிப்பு அதிகரிப்பதால், ஆரம்பத்திலேயே நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும், வடகிழக்கு பருவமழையால், சென்னை அண்ணா நகர் மண்டலத்தில் வில்லிவாக்கம், அரும்பாக்கம், அமைந்தகரை உள்ளிட்ட பகுதிகளில் கால்வாய் மற்றும் கூவம் ஆக்கிரமிப்பில் குடியிருந்தவர்கள் பாதிக்கப்பட்டனர்.
இவர்களுக்கு, கூவம் விரிவாக்கம் திட்டத்தின் கீழ், புளியந்தோப்பில் உள்ள கே.பி., பார்க் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கப்பட்டு, அனைவரும் மறுகுடியமர்வு செய்யப்பட்டனர்.
ஒவ்வொரு பகுதியாக ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் தீவிரமாக நடந்தன. மழைக்குப் பின், இந்த பணிகளில் தொய்வு ஏற்பட்டது. இதனால், கூவம் பகுதியில் ஆக்கிரமிப்பு மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளது.
குறிப்பாக, அமைந்தகரை காவல் நிலையம் பின்புறம் அருகில், கூவம் கரையோரத்தில் இருபுறமும் இருந்த ஆக்கிரமிப்புகள், கடந்த ஆண்டு அகற்றப்பட்டன.
இங்கு போதிய தடுப்பு நடவடிக்கை இல்லாததால், தற்போது மீண்டும் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளன. சிலர் கான்கிரீட் வீடுகள் கட்டி ஆக்கிரமித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
ஒவ்வொரு ஆண்டும் பருவ மழைக்காலங்களில் மட்டுமே கூவம் ஆக்கிரமிப்புகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அதன் பின் கண்டுகொள்வதில்லை.
இதனால், அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி, மீண்டும் ஆக்கிரமிப்புகள் அதிகரிக்கின்றன.
அவர்களுக்கு வீடுகள் ஒதுக்குவதில் சிக்கல் நிலவுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை கண்காணித்து, ஆரம்பத்திலேயே ஆக்கிரமிப்பிற்கு முற்றுப்புள்ளி வைக்க, தடுப்புச் சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.