/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆமை வேகத்தில் நடக்கும் 'எஸ்கலேட்டர்' பணி ஆவடி ரயில் நிலையத்தில் பயணியர் தவிப்பு
/
ஆமை வேகத்தில் நடக்கும் 'எஸ்கலேட்டர்' பணி ஆவடி ரயில் நிலையத்தில் பயணியர் தவிப்பு
ஆமை வேகத்தில் நடக்கும் 'எஸ்கலேட்டர்' பணி ஆவடி ரயில் நிலையத்தில் பயணியர் தவிப்பு
ஆமை வேகத்தில் நடக்கும் 'எஸ்கலேட்டர்' பணி ஆவடி ரயில் நிலையத்தில் பயணியர் தவிப்பு
ADDED : ஏப் 24, 2025 12:10 AM

ஆவடி, ஏவடி ரயில் நிலையத்தில், நான்கு நடை மேடைகள் மற்றும் ஆறு இருப்பு பாதைகள் உள்ளன. ஆவடி மார்க்கமாக தினமும் 285 மின்சார மற்றும் 5 விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
ஆவடியில், இந்திய விமானப்படை, ராணுவப்படை, ரிசர்வ் போலீஸ் படை, இன்ஜின் தொழிலகம் உள்ளிட்ட பல மத்திய அரசு நிறுவனங்கள் உள்ளன. இதில், கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் வட மாநிலங்களை சேர்ந்தவர்கள், ஆவடி சுற்றுவட்டார பகுதிகளில் தங்கி பணியாற்றுகின்றனர்.
தவிர, சென்னை, திருவள்ளூர், அரக்கோணம், திருத்தணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பள்ளி, கல்லுாரி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் என தினமும், 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஆவடி ரயில் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
ஆவடி ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள நடைமேம்பாலம் 46 படிகளுடன் செங்குத்தாக உள்ளது. அதில் ஏறி இறங்க முதியோர், கர்ப்பிணியர் உட்பட அனைவரும் சிரமப்படுகின்றனர். ஆபத்தை உணராமல், தண்டவாளத்தை கடந்து செல்வதால், சிலர் விபத்தில் சிக்கி இறக்கின்றனர். 3 கோடி மதிப்பில் கட்டப்பட்ட நடைபாலம், காதலர்கள் மற்றும் ஆதரவற்றோர் ஒதுங்கும் இடமாக மாறி வருகிறது.
இதையடுத்து பயணியர் தேவையை கருத்தில் கொண்டு, கடந்தாண்டு ஏப்ரலில் 1.50 கோடி ரூபாய் மதிப்பில், 'எஸ்கலேட்டர்'  அமைக்கும் பணி துவங்கியது. முதல் மற்றும் நான்காவது நடைமேடையில் மட்டும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இரண்டாவது நடைமேடையில் 'எஸ்கலேட்டர்' பணி ஆமை வேகத்தில் நடக்கிறது. இதனால் பயணியர் சிரமமடைகின்றனர்.
இது குறித்து சமூக ஆர்வலர் சடகோபன், 64 கூறியதாவது:
சி.டி.எச் மற்றும் திருமலைராஜபுரம் சாலையை இணைக்கும் வகையில் 'எஸ்கலேட்டர்' அமைத்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். அதேபோல், விரைவு ரயில்கள் நின்று செல்லும் நான்காவது மற்றும் முதல் நடை மேடையில், ஏறி, இறங்கும் வகையில் 'எஸ்கலேட்டர்' அமைத்திருக்கலாம்.
இதன் வாயிலாக, முதியோர், கர்ப்பிணியர், மாற்றுத்திறனாளிகள் பெரிதும் பயனடைவர். தொலைதூர பயணம் செய்து வருவோர் பெட்டி, படுக்கை உடன் வரும் போது, படிக்கட்டில் ஏறி, இறங்குவது சிரமமாக இருக்கும்.
இதற்கு மாற்று ஏற்பாடு செய்ய ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து ரயில்வே அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, 'ஆவடி ரயில் நிலையத்தை மேம்படுத்தும் பணி விரைவில் நடைபெற உள்ளது. எஸ்கலேட்டர் அமைக்கும் பணி விரைவுப்படுத்தப்படும்' என்றார்.
***

