/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'சென்னை ஒன்' செயலியில் மினி பஸ் டிக்கெட் பெற வசதி
/
'சென்னை ஒன்' செயலியில் மினி பஸ் டிக்கெட் பெற வசதி
ADDED : அக் 27, 2025 02:59 AM

சென்னை: சென்னையில் மாநகர போக்குவரத்து கழக சிற்றுந்துகளில் பயணிக்க, 'சென்னை ஒன்' செயலியில் டிக்கெட் பெறும் வசதி, விரைவில் அறிமுகம் செய்ய ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமமான 'கும்டா' திட்டமிட்டுள்ளது.
சென்னையில் போக்குவரத்து சேவைகளை ஒருங்கிணைப்பதற்காக, கும்டா என்ற போக்குவரத்து குழுமம் ஏற்படுத்தப்பட்டது. இந்த குழுமம் வாயிலாக, 'சென்னை ஒன்' என்ற செயலி புதிதாக உருவாக்கப்பட்டது.
கடந்த செப்., 22ல் துவக்கி வைக்கப்பட்ட இந்த செயலி வாயிலாக, மெட்ரோ ரயில், மின்சார ரயில், மாநகர பேருந்துகளில் பயணிப்பதற்கான டிக்கெட்டுகளை, க்யூ.ஆர்., குறியீடு வழியாக பெறலாம்.
இந்த மூன்று சேவைகளுக்கும் சேர்த்து அல்லது தனித்தனியாகவும் மக்கள் இந்த செயலியில் டிக்கெட் பெற முடியும்.
அறிமுகம் செய்யப்பட்ட 30 நாட்களில், 'சென்னை ஒன்' செயலியை, 30 நாட்களில், 4.58 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர்.
இந்த காலகட்டத்தில், மொத்தம் 3.7 லட்சம் டிக்கெட்டுகள், செயலி மூலம் பெறப்பட்டுள்ளன.
இதன்படி, சராசரியாக ஒரு நாளைக்கு, 22,000 பேர் சென்னை ஒன் செயலியில் டிக்கெட் எடுப்பதாக தெரிய வந்துள்ளது. இதன் வாயிலாக, சம்பந்தப்பட்ட துறைகளுக்கு, 73 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.
இந்நிலையில், சென்னை ஒன் செயலியில், மாநகர போக்குவரத்து கழக மாதாந்திர பயணச்சீட்டு பெறும் வசதிக்கான சோதனை ஓட்டம் நடத்தப்பட்டுள்ளது.
இது வெற்றிகரமாக அமைந்துள்ள நிலையில், இந்த வசதி விரைவில் சேர்க்கப்பட உள்ளது.
தற்போது, சென்னை ஒன் செயலியில், மாநகர போக்குவரத்து கழக சிற்றுந்துகளுக்கு டிக்கெட் பெறும் வசதி இல்லை. சென்னையில், பல்வேறு வழித்தடங்களில், 146 சிற்றுந்துகள் இயக்கப்படுகின்றன.
வழக்கமான பேருந்துகளை விட, இதற்கு வேறுபட்ட கட்டணம் உள்ளது. இந்த கட்டண விபரங்களை, சென்னை ஒன் செயலியில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விரைவில், இதற்கான வசதியும் மக்கள் பயன்பாட்டுக்கு வரவுள்ளதாக, கும்டா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

