/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தங்க கட்டிகள் தருவதாக மோசடி போலி அதிகாரிகள் கைது
/
தங்க கட்டிகள் தருவதாக மோசடி போலி அதிகாரிகள் கைது
ADDED : ஜன 19, 2025 12:22 AM

யானைகவுனி, யானைகவுனியில் குறைந்த விலையில் தங்க கட்டிகளை வாங்கி தருவதாக கூறி, 40 லட்சம் ரூபாய் மோசடி செய்த இருவரை, போலீசார் கைது செய்தனர்.
திருச்சி, மேற்கு விஸ்தரிப்பு, தில்லை நகர் முதல் கிராஸ் பகுதியைச் சேர்ந்த பிரவீன், 38 என்பவர், பூக்கடை துணை ஆணையரிடம் கொடுத்த புகார் மனு:
என் தந்தை மூக்கன் என்பவர், பங்குதாரராக நடத்தி வரும், திருச்சியில் பிரபலமான நகை கடையில், முதன்மை இயக்குனராக பணிபுரிந்து வருகிறேன்.
இந்த நகைக்கடையில், 2021ல் மேலாளராக பணிபுரிந்தேன். அப்போது, மயிலாடுதுறையைச் சேர்ந்த குரு சம்பத்குமார் என்பவர், ஆடிட்டர் எனக்கூறி அறிமுகம் ஆனார்.
அவரது நண்பரான புதுச்சேரியைச் சேர்ந்த லட்சுமிநாராயணன் என்பவர், வருமான வரித்துறையில் வேலை பார்ப்பதாக கூறி, அவரையும் அறிமுகப்படுத்தினார்.
ஜி.எஸ்.டி., சம்பந்தமான வேலைகளை பார்த்து வருவதாகவும், வங்கிகளிடம் இருந்து தங்க கட்டிகளை சந்தை விலையிலிருந்து குறைவான விலைக்கு வாங்கி தருவதாகவும் குரு சம்பத் ஆசை வார்த்தை கூறினார்.
இதை நம்பி, 2021ல், 40 லட்சம் ரூபாயை, சென்னை யானைகவுனி பகுதியில் உள்ள குரு சம்பத்குமார் அலுவலகத்தில் அவரிடம் கொடுத்தேன்.
பின், நான்கு ஆண்டுகளாகியும் இருவரும் தங்கத்தை வாங்கி தராமலும், பணத்தை திருப்பி தராமலும் ஏமாற்றி வந்தனர். பணத்தை திருப்பி கேட்ட போது, கொலை மிரட்டல் விடுத்தனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, பணத்தை மீட்டு தர வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து யானைகவுனி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில், அண்ணா நகர் மேற்கு, கலெக்டர் நகர் பிரதான சாலை, கோல்டன் பிளாட் பகுதியைச் சேர்ந்த குருசம்பத்குமார், 42, மற்றும் புதுச்சேரி முத்துபிள்ளை பாளையம், தமிழ் செங்கோடன் தெருவைச் சேர்ந்த லட்சுமிநாராயணன், 46, ஆகியோர் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
அவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து, 'இன்னோவா' கார் மற்றும் மூன்று மொபைல்போன்களை பறிமுதல் செய்தனர்.
மேலும், அரசு வாகனங்களில் இருப்பதைபோல் 'ஜி' மற்றும் 'அ' என்ற எழுத்துக்களை காரில் ஒட்டியும், தமிழ்நாடு அரசு சின்னம் பொறித்த போலியான வி.ஐ.பி., பாஸ் தயார் செய்து காரின் முன்புறத்தில் ஒட்டியும், அரசு துறையில் பணிபுரிவது போல நம்பவைத்து, மோசடி செயல்களில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார், இருவரையும் நேற்று சிறையில் அடைத்தனர்.