/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாணவி வேகமாக ஓட்டிய கார் மோதி விவசாயி பலி
/
மாணவி வேகமாக ஓட்டிய கார் மோதி விவசாயி பலி
ADDED : பிப் 21, 2025 12:12 AM

திருப்போரூர்:செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அடுத்த ஆலத்துாரைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார், 45; விவசாயி.
திருப்போரூரில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் தன் குழந்தைகளை அழைத்து வர, நேற்று, பைக்கில், திருப்போரூர் நோக்கி சென்றார்.
தண்டலம் கிராம வளைவுப் பகுதியில், அதிவேகமாக வந்த கார், சாலை மையத்தடுப்பில் உரசி, இவரது பைக் மீது மோதியது. இதில், சுரேஷ்குமார் துாக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே பலியானார். அந்த காரும், சாலையோரம் இருந்த மின் கம்பத்தை உடைத்துக் கொண்டு, விவசாய நிலத்தில் உள்ள பள்ளத்தில் விழுந்தது.
காரில், 19 வயது முதல் 20 வரையில் இரு மாணவன், நான்கு மாணவியர் என, 6 பேர் இருந்துள்ளனர். இதில், மாணவி ஒருவர் காரை ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்தியது தெரிந்தது; காரில் இருந்தோரும் பலத்த காயமடைந்தனர்.
அங்கிருந்தோர், அவர்களை மீட்டு, திருப்போரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். காரில் வந்த மாணவ - மாணவியர், படூர் உள்ள தனியார் கல்லுாரியில் படித்து வருகின்றனர். கல்லுாரி முடிந்து மாமல்லபுரம் சென்று திரும்பிய போது, இந்த விபத்து நடந்துள்ளது.
இதற்கிடையில், விபத்தில் இறந்த சுரேஷ்குமாரின் உறவினர்கள், சம்பவ இடத்திற்கு வந்து, அவரது சடலத்தை ஓ.எம்.ஆர்., சாலையின் நடுவே வைத்து, மறியலில் ஈடுபட்டனர்.
விபத்து ஏற்படுத்திய கல்லுாரி மாணவியர் மீது நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும் என, கோஷமிட்டனர். திருப்போரூர் போலீசார் பேச்சு நடத்தியதை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.