டி.பி.,சத்திரம்: அண்ணா நகர் போக்குவரத்து பெண் போலீசாராக பணிபுரிந்தவர் கார்த்திகா ராணி, 28. இவரது கணவர் மணிகண்டன், 35. இவர்களுக்கு, 13 வயதில் மகளும், 11 வயதில் மகனும் உள்ளனர்.
கருத்து வேறுபாடு காரணமாக, கணவரை பிரிந்து, கடந்த இரண்டு ஆண்டுகளாக, டி.பி.,சத்திரத்தில் உள்ள போலீஸ் குடியிருப்பில், கார்த்திகா ராணி தனியாக வசிக்கிறார். குழந்தைகள், திண்டுக்கலில் உள்ள பாட்டி வீட்டில் தங்கியுள்ளனர்.
குடும்ப பிரச்னை காரணமாக, சில நாட்களாக கார்த்திகா ராணி மன உளைச்சலில் இருந்ததாக தெரிகிறது. நேற்று முன்தினம் மாலை, கார்த்திகா ராணியின் மகள் பல முறை மொபைல் போனில் தொடர்பு கொண்டுள்ளார். இருப்பினும், அதை அவர் எடுக்காததால், தாயின் நண்பரான போலீஸ்காரர் ஒருவருக்கு சிறுமி தகவல் தெரிவித்துள்ளார்.
போலீஸ் குடியிருப்புக்கு சென்ற போலீஸ்காரர், திறந்திருந்திருந்த வீட்டிற்குள் சென்று பார்த்த போது, கார்த்திகா ராணி துாக்கிட்டு தற்கொலை செய்திருப்பது தெரிந்தது.
சம்பவம் அறிந்து வந்த டி.பி., சத்திரம் போலீசார், உடலை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர்.

