/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சென்னை பல்கலையில் நிதி சிக்கல் மாணவர்களின் கல்வி பாதிப்பு
/
சென்னை பல்கலையில் நிதி சிக்கல் மாணவர்களின் கல்வி பாதிப்பு
சென்னை பல்கலையில் நிதி சிக்கல் மாணவர்களின் கல்வி பாதிப்பு
சென்னை பல்கலையில் நிதி சிக்கல் மாணவர்களின் கல்வி பாதிப்பு
ADDED : ஜன 28, 2026 05:12 AM
சென்னை: சென்னை பல்கலையில், முதுநிலை சமூகப்பணி துறையில் பயிலும் மாணவ- - மாணவியருக்கு, களப்பணிக்கான நிதி குறைந்த அளவே ஒதுக்கப்படுவதால், அவர்களின் கள அளவிலான பயிற்சி பாதிக்கப்பட்டு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சென்னை பல்கலையில், எம்.எஸ்.டபிள்யூ., எனும் முதுநிலை சமூக பணிகள் படிப்பு பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது. இதில் சேரும் மாணவ - மாணவியருக்கு, அரசு அல்லாத தன்னார்வ அமைப்புகள், சுகாதாரம் மற்றும் மருத்துவ நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்து அறிய வாய்ப்பு கிடைக்கும்.
அதன்படி, ஒவ்வொரு செமஸ்டரிலும், மாணவ - மாணவியர், சில நாட்கள், கிராமங்கள் உட்பட பல பகுதிகளுக்கு சென்று, சமூக களப்பணி பயிற்சி மேற்கொள்வது கட்டாயம்.
இந்த களப்பணிக்காகவே, ஆண்டுக்கு 30,000 ரூபாய் கட்டணமாக பல்கலைக்கு, மாணவர்கள் செலுத்துகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளாக, சென்னை பல்கலையில் சமூக பணி துறையில் படிக்கும் மாணவ - மாணவியருக்கான களப்பணி பயிற்சிகள், தங்கு தடையின்றி நடந்து வந்தன.
தற்போது, பல்கலை கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிப்பதால், இந்த பயிற்சிகள் முடங்கி உள்ளன.
களப்பணிக்காக மாணவர்கள், 30,000 ரூபாய் செலுத்திய நிலையில், அதில், 30 சதவீதம் மட்டுமே, களப்பணி பயிற்சிக்கு ஒதுக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நடப்பாண்டில், முதுநிலை சமூக பணிகள் துறையில் படிக்கும் இரண்டாம் ஆண்டு மாணவர்கள், களப்பணிக்காக கடந்த நவம்பர் மாதமே விண்ணப்பித்தனர். இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை.
துறைக்கு போதிய பேராசிரியர் இல்லாததாலும், நிதிப்பற்றாக்குறை காரணமாகவும், இந்த பணிகள் கடுமையாக பாதித்துள்ளன.
இதுகுறித்து, பல்கலை வட்டாரங்கள் கூறியதாவது:
சென்னை பல்கலை சமூக களப்பணிகள் துறைக்கு போதிய பேராசிரியர்கள் இல்லை. இதனால், கற்றல் - கற்பித்தல் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. நிதிப்பற்றாக்குறையால், மாணவர்களின் களப்பணியும் முடங்கி உள்ளது.
மாணவர்களின் களப்பணிக்கு, அவர்கள் செலுத்திய 100 சதவீத தொகையை வழங்க வேண்டும் என, உயர்கல்வித்துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விரைவில், இதற்கு தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

