ADDED : பிப் 13, 2026 06:06 AM

கடம்பத்துார்: அத்திப்பட்டு புதுநகரில் இருந்து புறப்பட்ட சரக்கு ரயிலில், நள்ளிரவில் திடீரென தீவிபத்து ஏற்பட்டதால், கடம்பத்துாரில் நிறுத்தப்பட்டது.
எண்ணுாரை அடுத்த அத்திப்பட்டு புதுநகர் பகுதியில் இருந்து, நேற்றுமுன்தினம் இரவு நிலக்கரி ஏற்றிக்கொண்டு, சரக்கு ரயில் ஆந்திர மாநிலம், ரேணிகுண்டா நோக்கி சென்று கொண்டிருந்தது. ஏகாட்டூர் ரயில் நிலையத்தை நள்ளிரவு 1:00 மணியளவில் கடந்து சென்றபோது, இரு பெட்டிகளில் இருந்து திடீரென புகை பரவியது.
ரயில் பெட்டியில் இருந்த நிலக்கரி தீப்பற்றி எரிந்தது. ஏகாட்டூர் ரயில் நிலைய கேட் கீப்பர், திருவள்ளூர் ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் அளித்தார். இதையடுத்து, கடம்பத்துார் ரயில் நிலையத்தில், சரக்கு ரயில் நிறுத்தப்பட்டது.
தீயணைப்பு நிலைய அலுவலர் பிரசன்னா தலைமையில், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, தீ எரிந்த பெட்டிகளில் தண்ணீரை பீய்ச்சி அடித்து, தீ மற்றும் புகையை கட்டுப்படுத்தினர். பின், ரயில் அதிகாலை 4:00 மணிக்கு, ரேணிகுண்டா நோக்கி புறப்பட்டு சென்றது.

