ADDED : மார் 03, 2026 05:16 AM

செங்குன்றம்: செங்குன்றம், கிராண்ட்லைன் மகாராஜா நகரில் பெயின்ட் கிடங்கு உள்ளது. இதை, பெரம்பூரைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் நிர்வகித்து வருகிறார். நேற்று மதியம் 1:00 மணியளவில், பூட்டப்பட்டிருந்த கிடங்கில் இருந்து வெண்புகை வெளியேறியது.
அச்சமடைந்த பகுதி மக்கள், தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர். செங்குன்றம், மாதவரம் நிலையங்களில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். விபத்தின்போது கேன்களில் அடைக்கப்பட்டிருந்த ரசாயன மூலப்பொருட்கள் வெடித்ததால், பதற்றம் நிலவியது. 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் நாசமானதாக கூறப்படுகிறது. செங்குன்றம் போலீசார் விசாரிக்கின்றனர்.
***
நண்பர்களுக்குள் வெட்டுக்குத்து
புளியந்தோப்பு: புளியந்தோப்பு, சாஸ்திரி நகரைச் சேர்ந்தவர் ‛ஜால்ரா' தினேஷ், 26. இவர், நண்பர்களான செந்தில், 28, திவாகர், மாணிக்கம், 28, ஆகியோருடன், நேற்று முன்தினம் மாலை லால் சிங் தெருவில் மது அருந்தியுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில், செந்தில் கத்தியால் தினேஷை வெட்டி தப்பினார். பலத்த காயமடைந்த தினேஷ், அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். விசாரித்த புளியந்தோப்பு போலீசார், செந்தில், 28, ஆவடியைச் சேர்ந்த மாணிக்கம், ஆகிய இருவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்; திவாகரை தேடி வருகின்றனர்.
***
பள்ளி வேன் ஓட்டுநர் 'போக்சோ'வில் கைது
செங்குன்றம்: பொன்னேரியைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம், 57. இவர், செங்குன்றம் தனியார் பள்ளியில் வேன் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் 4ம் வகுப்பு மாணவி ஒருவரை, பள்ளியில் இருந்து வீட்டிற்கு அழைத்து சென்ற போது, அம்மாணவியிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து மாணவியிடம் அத்துமீறியுள்ளார். மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின்படி, செங்குன்றம் போலீசார் பன்னீர்செல்வத்தை நேற்று, போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
போன் திருடியவருக்கு 'காப்பு'
எஸ்பிளனேடு: வியாசர்பாடியைச் சேர்ந்தவர் வேலன், 20. கடந்த 4ம் தேதி பிராட்வே, அண்டர்சன் தெருவில் உள்ள உறவினர் வீட்டு துக்க நிகழ்வில் பங்கேற்று, சாலையோரத்தில் துாங்கி உள்ளார். மறுநாள் எழுந்து பார்த்தபோது, சட்டை பையில் வைத்திருந்த மொபைல் போன் திருட்டு போயிருந்தது. இது குறித்து விசாரித்த எஸ்பிளனேடு போலீசார், திருட்டில் ஈடுபட்ட ஆலந்துாரைச் சேர்ந்த சந்துரு, 20, என்பவரை கைது செய்து, இரண்டு மொபைல் போன்கள், 400 ரூபாய் பறிமுதல் செய்தனர்.

