/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பழவேற்காடில் காலியாக திரும்பும் படகுகள் மீன்வரத்து இல்லாததால் மீனவர்கள் விரக்தி
/
பழவேற்காடில் காலியாக திரும்பும் படகுகள் மீன்வரத்து இல்லாததால் மீனவர்கள் விரக்தி
பழவேற்காடில் காலியாக திரும்பும் படகுகள் மீன்வரத்து இல்லாததால் மீனவர்கள் விரக்தி
பழவேற்காடில் காலியாக திரும்பும் படகுகள் மீன்வரத்து இல்லாததால் மீனவர்கள் விரக்தி
ADDED : ஜூன் 27, 2025 12:51 AM

பழவேற்காடு,
தடை காலத்திற்கு பின், மிகுந்த எதிர்பார்ப்புடன் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள், மீன் கிடைக்காமல் காலி படகுகளுடன் கரை திரும்புகின்றனர்.
மீன்பிடி தடைக்காலமான ஏப்., 15 முதல் கடந்த 14ம் தேதி வரை, மீனவர்கள் விசைப்படகுகளில் மட்டுமே குறைந்தளவு மீன் பிடித்து வந்தனர்.
தடைக்காலம் முடிந்து, அதிகளவில் மீன் கிடைக்கும் என எதிர்ப்பார்ப்புடன், கடலுக்கு சென்ற பழவேற்காடு மீனவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
வலை விரித்து பல மணி நேரம் காத்திருந்தும், வலையில் மீன் ஏதும் சிக்காமல், காலி படகுகளுடன் கரை திரும்புகின்றனர். ஒரு சிலர், இரண்டு நாள் கடலில் தங்கி மீன்பிடித்து வந்தாலும், குறைந்த மீன் வகைகளுடன் கரை திரும்புகின்றனர்.
எதிர்பார்த்த வருவாய் கிடைக்காத நிலையில், மீனவர்கள் தொழிலுக்கு செல்வதை தவிர்த்து வருகின்றனர். தொழில் மற்றும் வருவாய் இல்லாமல் வீடுகளில் முடங்கியுள்ளனர். இதனால், மொத்த வியாபாரிகள், சிறு வியாபாரிகளும் வருவாய் இன்றி தவிக்கின்றனர்.
மீன்வளத் துறை அதிகாரிகள் கூறுகையில், 'காற்று வேகமாக வீசும்போது கடல் கலங்கும். அச்சமயங்களில் மீன்வரத்து அதிகளவில் இருக்கும்.
கடலில் காற்று திசை மாறி வீசுவதால், நீரோட்ட திசையும் மாறி, மீன்வரத்து குறைந்துள்ளது. பருவமழை காலம் துவங்கும்போது காற்றின் திசை மாறும். அப்போது பழவேற்காடு ஏரியில் நீர்வரத்து அதிகரித்து, வழக்கம்போல் மீன் கிடைக்கும்' என்றனர்.
பழவேற்காடு மீனவர்கள் கூறியதாவது:
வழக்கமாக, தெற்கில் இருந்து வடக்கு நோக்கி நீரோட்டம் இருக்கும். அச்சமயங்களில் எதிர்பார்த்த மீன் கிடைக்கும். வழக்கத்திற்கு மாறாக தற்போது, வடக்கில் இருந்து தெற்கு நோக்கி கடலின் நீரோட்டம் இருப்பதால், தண்ணீர் தெளிவாக இருக்கிறது.
இந்த நீரோட்டத்தில் வலைகள் சுருண்டு கயிறுபோல் ஆகிவிடுகின்றன. இதனால், வலையில் மீன் சிக்குவதில்லை.
மேலும், அலையின் சீற்றமும் குறைவாக இருப்பதால், ஆழ்கடலில் இருந்து கரையை நோக்கி வரும் மீன்களின் வரத்து குறைந்துள்ளது. தற்போது, கடலுக்கு செல்வோருக்கு கிடைக்கும் மீன், டீசலுக்கு கூட கட்டுப்படியாகாத நிலை தான் உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.