/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
6 நீர்நிலையோர பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை
/
6 நீர்நிலையோர பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை
ADDED : மே 16, 2025 12:20 AM
சென்னை,:செம்பரம்பாக்கம், பூண்டி, செங்குன்றம், சோழவரம் ஆகிய ஏரிகளில் இருந்து வெள்ள அபாயம் ஏற்படும்போது, கரையோர மக்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஒத்திகை, இன்று நடைபெற உள்ளது.
இது குறித்து, சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கை:
செம்பரம்பாக்கம், பூண்டி, செங்குன்றம், சோழவரம் ஆகிய ஏரிகளில் இருந்து, வெள்ள நீர் அதிகம் வெளியேற்றப்படும்போது, ஆற்றின் கரையோரங்களில் வெள்ள அபாயம் ஏற்படும்.
அப்போது, ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் மக்களை எவ்வாறு மீட்டு, பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைப்பது குறித்த பாதுகாப்பு மற்றும் ஒத்திகை பயிற்சி, இன்று மாலை 4:00 மணிக்கு நடைபெற உள்ளது.
வருவாய், நீர்வளம், காவல், ஊரக வளர்ச்சி உள்ளிட்ட துறைகளுடன் இணைந்து, மாத்துார் பாலசுப்பிரமணி நகர், சடையான்குப்பம், கானு நகர், காசி திரையரங்கம் அருகில் உள்ள பாலம், போரூர், கோட்டூர்புரம் ஆகிய இடங்களில் ஒத்திகை நடைபெறும்.
இந்நிகழ்வு ஒத்திகை மட்டுமே, பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம். ஒத்திகை நிகழ்ச்சியால், மக்களின் இயல்பு வாழ்க்கை ஏதும் பாதிக்கப்படாது.
செம்பரம்பாக்கம், பூண்டி, செங்குன்றம், சோழவரம் ஏரிகளில் இருந்து, அதிக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால், பொதுமக்கள் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் மற்றும் 1913 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.