/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வரி கட்டுவதில் 6 ஆண்டாக இழுத்தடிப்பு 'மாஜி' எம்.எல்.ஏ., தியேட்டர்களுக்கு 'சீல்'
/
வரி கட்டுவதில் 6 ஆண்டாக இழுத்தடிப்பு 'மாஜி' எம்.எல்.ஏ., தியேட்டர்களுக்கு 'சீல்'
வரி கட்டுவதில் 6 ஆண்டாக இழுத்தடிப்பு 'மாஜி' எம்.எல்.ஏ., தியேட்டர்களுக்கு 'சீல்'
வரி கட்டுவதில் 6 ஆண்டாக இழுத்தடிப்பு 'மாஜி' எம்.எல்.ஏ., தியேட்டர்களுக்கு 'சீல்'
ADDED : செப் 20, 2024 12:23 AM

நங்கநல்லுார்,
நங்கநல்லுாரில் 'வெற்றிவேல், வேலன்' என, இரண்டு திரையரங்குகள் உள்ளன. இதன் நிறுவனர் கண்டோன்மென்ட் சண்முகம். தி.மு.க.,வைச் சேர்ந்த இவர், ஆலந்துார் தொகுதியில், 1989, 96ல் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த மாதம் சண்முகம் மரணமடைந்தார்.
இவர், 1972ல் வெற்றிவேல் திரையரங்கத்தை துவக்கினார். சில ஆண்டுகளுக்கு பின், வேலன் திரையரங்கம் கட்டப்பட்டது. கால மாற்றத்திற்கு ஏற்ப, 2017 - -18ம் ஆண்டில் கேளிக்கை அரங்குகளுடன் இரு திரையரங்குகளும் நவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டன. திரையரங்குகளை, சண்முகம் மகன் வெற்றிவேல் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், திரையரங்குகளின் மேம்பாட்டிற்கு ஏற்ப, மாநகராட்சி சார்பில் வரிமாற்றம் செய்யப்பட்டது.
நவீனப்படுத்துவதற்கு முன், 'வெற்றிவேல்' திரையரங்கிற்கு 19,734 ரூபாயும், வேலன் திரையரங்கிற்கு, 12,035 ரூபாயும் வரியாக வசூலிக்கப்பட்டுள்ளது.
அதன்பின், வெற்றிவேல் தியேட்டருக்கு 3 லட்சம் ரூபாயும், வேலன் திரையரங்கிற்கு, 1.47 லட்சம் ரூபாயும் சிறப்பு வரி விதிக்கப்பட்டது.
ஆனால், திரையரங்க நிர்வாகம் புது வரியை ஏற்க மறுத்தது. பழைய வரி மட்டுமே செலுத்தி வந்துள்ளனர். மாநகராட்சி வருவாய் துறையினர் நெருக்கடி கொடுக்கவே, திரையரங்கத்தினர் கடந்தாண்டு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கு தள்ளுபடியானது.
இதையடுத்து, சிறப்பு வரித்தொகை செலுத்தாத திரையரங்கிற்கு 'நோட்டீஸ்' தொடர்ந்து வழங்கப்பட்டது.
திரையரங்க உரிமையாளர்களின் அலட்சியத்தால், வரி நிலுவை அதிகரித்தது. வெற்றிவேல் திரையரங்கிற்கு 40 லட்சம் ரூபாயும், வேலன் திரையரங்கிற்கு 20 லட்சம் ரூபாயும் நிலுவை உள்ளது. இதையடுத்து, நேற்று முன்தினம் திரையரங்கிற்கு சென்ற வருவாய் துறையினர் இறுதி எச்சரிக்கை விடுத்தனர்.
அதற்கும் திரையரங்க நிர்வாகத்தில் இருந்து அலட்சியமாகவே பதில் வந்துள்ளது. இதையடுத்து, நேற்று காலை ஆலந்துார் மண்டல உதவி வருவாய் அலுவலர்கள் திருமால், கோபி ஆகியோர் தலைமையில், போலீசார் பாதுகாப்புடன் மாநகராட்சி ஊழியர்கள் அனைத்து கதவுகளையும் பூட்டி 'சீல்' வைத்தனர்.