/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நரிக்குறவர் இன மக்களுக்கு இலவச மருத்துவ முகாம்
/
நரிக்குறவர் இன மக்களுக்கு இலவச மருத்துவ முகாம்
ADDED : நவ 17, 2024 10:30 PM
சென்னை:தேசிய தொல்குடி தினத்தை ஒட்டி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, 'ரோட்டரி கிளப் ஆப் சென்னை சன் சிட்டி' ஆகியவற்றின் சார்பில், சென்னையில் நேற்று, நரிக்குறவர் சமூக மக்களுக்கு, இலவச மருத்துவ முகாம் நடந்தது.
திருவான்மியூர், கோட்டூர்புரம் பகுதிகளில் நடந்த முகாமில், 400க்கும் அதிகமானோர் பங்கேற்றனர். அவர்களுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை பரசோதனை நடத்தப்பட்டது. பொது சுகாதாரம், தோல் மற்றும் காது தொடர்பான மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.
இதுகுறித்து, பழங்குடியின நலத்துறை கூடுதல் செயலர் உமா மகேஸ்வரி கூறியதாவது:
தேசிய தொல்குடி தினத்தை ஒட்டி, தமிழகம் முழுதும் உள்ள பட்டியலின, பழங்குயின மக்களுக்கு, அரசு தரப்பில், பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. நவ., 16 முதல் 26 வரை, தொல்குடி தினம் கொண்டாடப்படுகிறது. பட்டியலின, பழங்குடியின மக்களுக்கு ஜாதி சான்றிதழ், வீட்டு மனைப் பட்டா, ஆதார் அட்டை வழங்குதல் மற்றும் புதுப்பிப்பது இந்த தினத்தின் நோக்கம்.
சென்னையில் உள்ள 3,000க்கும் மேற்பட்ட நரிக்குறவர் சமூக மக்களுக்கு, குழந்தை மருத்துவம், தோல் நோய், கண், காது மற்றும் மழைக்கால தொற்று நோய்கள் தொடர்பான, இலவச மருத்துவ சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது. முகாமில், சோதனை தகவல்களை பதிவு செய்ய, ஒரு புத்தகம் வழங்கப்பட்டுள்ளது.
தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டால், தகவல்கள் புத்தகத்தில் பதிவு செய்யப்படும். பின் உயர் சிகிச்சைக்காக, அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு, உரிய சிகிச்சை அளிக்கப்படும்.
இவ்வாறு, அவர் கூறினார்.