மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி
மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி
ADDED : ஆக 17, 2026 08:02 PM
ஆவடி: தமிழகத்தில் முதன்முறையாக, ஆவடி மாநகராட்சி சார்பில் அரசு பள்ளி மாணவர்களின் திறனை மேம்படுத்தும் வகையில், பாடத்திட்டம் சாராத சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
ஆவடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, பட்டாபிராம் சத்திரம், கோவில்பதாகை, திருமுல்லைவாயல், சோழம்பேடு, பட்டாபிராம் அண்ணா நகர் உள்ளிட்ட 16 மாநகராட்சி பள்ளிகளில், ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் 5,500 மாணவ – மாணவியருக்கு சிலம்பம், பரதநாட்டியம், நாட்டுப்புற நடனம், கர்நாடக இசை, ஓவியம், தடகளம், கைப்பந்து உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
பத்தாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை உள்ள மாணவர்களுக்கு, அவர்களின் விருப்பம் மற்றும் தேர்வின் அடிப்படையில் பயிற்சி வழங்கப்படுகிறது. இதற்காக மாநகராட்சி சார்பில், 15 சான்றளிக்கப்பட்ட பயிற்சியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மூலம் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
விரைவில், ‘ஸ்போக்கன் இங்கிலிஷ்’ மற்றும் குத்துச்சண்டை பயிற்சிகளும் தொடங்கப்பட உள்ளன.
இந்த வகுப்புகள் மூலம், மாணவர்கள் போதை உள்ளிட்ட தேவையற்ற விஷயங்களில் கவனம் சிதறாமல், ஆக்கப்பூர்வமான திறன்களையும் ஆற்றல்களையும் வளர்த்துக்கொள்ள முடியும் என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
